1. கால்நடை

காளான் வளர்ப்பு - பால் காளான்

KJ Staff
KJ Staff

பால் காளான் மொட்டு போன்று குடை வடிவத்துடனும் மற்றும் பால் வெண்மை நிறத்துடனும் காணப்படும். அதிக முதலீடின்றி வைக்கோலில் வளர்த்து அதிக விளைச்சல் பெறலாம்.

படுக்கை தயாரிக்கும் முறை

பால் காளான் உற்பத்திக்கு தென்னை கீற்று கொட்டகையும், பாலிதீன் கூண்டும் தேவைப்படும். மூலவித்து தயாரிக்க பால் காளான் திசுவை சோதனைக் குழாயில் வளர்க்க வேண்டும். இதிலிருந்து தாய் வித்து மற்றும் படுக்கை வித்துக்களை தயாரிக்க வேண்டும். பால் காளான் வளர்ப்பிற்கு உருளை வடிவ படுக்கைகளை தயார் செய்து தென்னை கீற்று கொட்டகைகளுக்குள் தொங்க விட வேண்டும். பூசணம் நன்கு பரவியபின் படுக்கைகளை குறுக்காக இரண்டாக வெட்டி மண் பூச்சுக்கலவையிட்டு பாலீதின் கூண்டுக்குள் வைக்க வேண்டும்.

காளான் வளர்க்கும் அறை கூண்டு

காளான் வளர்ப்பு அறையின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையும் ஈரப்பதம் 85 சதவிகிதமும் இருத்தல் அவசியம். இந்த வெப்பநிலையை ஏற்படுத்த காளான் குடிலை கூண்டு வடிவத்தில் அமைக்க வேண்டும். ஒரு நிழலான இடத்தில் 25-30 அடி ஆழத்தில் 5 X 10 மீட்டர் செவ்வக வடிவத்தில் குழி தோண்டி உட்புறச் சுவர்கள ஹாலோ பிளாக் கல் கொண்டு அமைக்கலாம். குழியின் மேற்பகுதியில் கெட்டியான நீல நிற சில்பான் உறுதியாக பாலித்தீன் தாளை பொறுத்தி கூண்டு போன்று அமைக்க வேண்டும். இம்மாதிரி அமைக்கப்பட்ட 50 சதுர மீட்டர் பரப்பளவு கூண்டில் நாளொன்றுக்கு 5-10 கிலோ காளான் உற்பத்தி செய்யலாம்.

வளர்ப்பு முறை

  • காளான் படுக்கைகளை அடுக்குமுறை உருளைப்படுக்கைகளாக தயார் செய்து கீற்றுக் கொட்டகைகளுக்குள் தொங்க விட வேண்டும். இவ்வறையின் வெப்பநிலை 25-30 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வேண்டும்.
  • படுக்கைகள் 10-15 நாட்களில் வெண்மை நிறம் அடைந்தவுடன் சம அளவுள்ள இரண்டு படுக்கைகளாக நடுவில் வெட்டிவிட வேண்டும்.
  • ஒவ்வொரு அரை படுக்கையின் மேல் சுமார் 1-2 செ.மீட்டருக்கு மேற்பூச்சு கலவையை சமமாக இட வேண்டும்.
  • மேற்பூச்சு கலவையை கீழ்கண்ட முறையில் தயாரிக்க வேண்டும்.
  • மேற்பூச்சு கலவை தயாரிக்க கரிசல் மண் (கார அமில நிலை 8.0 இருக்க வேண்டும்) இந்நிலை கொண்டு வர சுண்ணாம்பு அதாவது கால்சியம் கார்பனேட் ஒரு கிலோ மண்ணிற்கு 10 கிராம் என்ற அளவில் சேர்க்க வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து மண்ணை 20 இராத்தல் அழுத்தத்தில் வெப்ப மூட்டியில் ஒன்றரை மணி நேரம் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். சூடு ஆறியபின் தொற்று நீக்கம் செய்த மண்ணை மேற்பூச்சுக்காக பயன்படுத்தலாம்.
  • மேற்பூச்சு கலவை இட்டபின் படுக்கைகளை பாலித்தீன் கூண்டிற்குள் வைத்து பராமரிக்க வேண்டும்.
  • படுக்கையின் மீது லேசான தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒரு வாரத்தில் வெண்மை நிற காளான் பூசண இழைகள் மேற்பூச்சு மண் உறையின் மேல் படரும்.
  • அதன்பின் ஒரு வாரத்தில் காளான் மொட்டுக்கள் தோன்றும். இவை வளர்ந்து ஒரு வாரத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும். தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால் 5-7 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அறுவடைகள் கிடைக்கும்.

பால் காளான் சிறப்பியல்புகள்

  • பால்காளானில் 30-32 சதம் புரதச் சத்தும் 40-45 சதம் நார்ச்சத்தும் உள்ளது.
  • காளான் பால் வெண்மை நிறமாக இருப்பதோடு, விளை திறன் சுமார் 150 சதவிகிதம் வரை இருக்கும். அதாவது இரு அரை படுக்கைகள் அல்லது ஒரு காளான் வித்துப்புட்டியிலிருந்து சுமார் 15 கிலோ காளான் விளைச்சல் பெறலாம்.
  • பால் காளானில் அதிக நார்ச் சத்து உள்ளதால் அதிக நாட்கள் அதாவது 4 நாட்கள் வரை சாதாரண சூழ்நிலையில் வைக்கலாம். மேலும் இரண்டு நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தலாம்.

காளான் உற்பத்தியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்

  • நெல் வைக்கோல் தரமானதாகவும் பொன் நிறத்துடனும் பூச்சி மற்றும் நோய் தாக்காதவாறும் இருத்தல் வேண்டும்.
  • காளான் படுக்கை தயாரிக்கும் போது வைக்கோலின் ஈரப்பதம் 65 சதவிகிதம் இருக்குமாறு பராமரிக்கப்பட வேண்டும். ஈரப்பதம் அதிகமானால் பாக்டீரியா நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் காணப்படும்.
  • காளான் வளர்ப்பு அறையில் பால் காளானிற்கு 35-40 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருத்தல் வேண்டும். வெப்பநிலை அதிகரித்தால் காளான்கள் உலர்ந்து நிறம் மாறி வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • காளான் வளர்ப்பறையை சுத்தமாக பராமரித்தல் அவசியம்.
  • பதினைந்து நாட்க்ள இடைவெளியில் படுக்கைகளை வேற்று அறைக்கு மாற்றம் செய்து விட்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் 1:2 என்ற விகிதத்தில் புகைமூட்டமும் ஏற்படுத்த வேண்டும்.
  • வேற்றுப் பூசணம் மற்றும் பூச்சி தாக்குதல் உள்ள படுக்கைகளை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். இதனால் மேலும் பரவுவதைத் தடுக்கலாம்.
  • நன்கு வளர்ந்த காளான்களில் இழைகள் நன்கு விரிந்து காணப்படும். இந்நிலையில் அறுவடை மேற்கொள்ள வேண்டும்.
  • அறுவடை தாமதித்தால் காளான்களை அழுகி அதன் மூலம் பாக்டீரியா நோய் குடில் முழுவதும் பரவிவிடும்.
  • பால் காளனிற்கு இடும் மேற்பூச்சு மண்ணை சரியாக 20 இராத்தல் அழுத்தத்தில் ஒன்றறை மணி நேரம் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். இதனை சரியாக செய்ய விட்டால் வெற்று பூசண தாக்குதல்கள் காணப்படும்.
  • காளான்கள் பறித்தவுடன் படுக்கையின் மேல் தண்ணீர் தெளித்தல் வேண்டும். காளான்களின் மேல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பாக்டீரியா நோய் உருவாகி அழுகிவிடும்.
  • காளான் குடிலுக்குள் செல்லும் வேலையாட்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

 

 

English Summary: Mushroom cultivation Published on: 11 October 2018, 06:31 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.