1. தோட்டக்கலை

வெள்ளைப் பூண்டு – அறுவடை பின்செய் நேர்த்தி

KJ Staff
KJ Staff

வெள்ளைப் பூண்டு ஒரு முக்கியமான மணமூட்டும் காய்கறி பயிராகும். இது வெங்காயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இந்தியாவில் பயிரிடப்படுகின்றது. பூண்டு ஐரோப்பா, மத்திய ஆசியாவை தாயகமாகக் கொண்டிருந்தாலும் எகிப்தியர்களால் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்த பயிராகும். இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்டு யுனானி, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் சீனா, இந்தியா, கொரியா, அமெரிக்கா, ரஷ்யா, எகிப்து, நெதர்லாந்து, ஜோர்டான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.

இந்தியாவில், குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார், ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்திராஞ்சல், அரியானா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பூண்டு சாகுபடி நடைபெறுகின்றது. தமிழ் நாட்டில், பூண்டு அதிகளவில் மலைப்பிரதேசங்களிலும், சிறிதளவு சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகின்றது. கொடைக்கானல், நீலகிரி மலைப் பகுதிகள் பூண்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 370 எக்டர் பரப்பளவில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுக்கு 2256 டன் உற்பத்தி செய்யப் படுகின்றது. சீரிய சாகுபடி தொழில் நுட்பத்துடன் விளைந்த பயிரிலிருந்து தரமான பூண்டுகள் கிடைப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக பூண்டு சாகுபடியில் அறுவடை பின்செய் நேர்த்தி சரியாக பின்பற்றப் படவில்லையெனில், 15 - 20 சத விளைச்சல் இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவ்விழப்பைக் குறைப்பதற்குத் தக்க முறையில் பூண்டினை உலர்த்தி பதப்படுத்த வேண்டும்.

அறுவடை முதிர்ச்சி

செடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சளாக மாறி பின் செடியின் மேல் இருக்கும் ஐந்து அல்லது ஆறு இலைகள் பச்சையாகவே இருந்தால் அதுவே அறுவடை செய்வதற்கு ஏற்ற காலமாகும். பொதுவாக நடவு செய்த 120 முதல் 130 நாள்களுக்குள் செடிகள் அறுவடைக்கு தயாராகிவிடும். பூண்டினை உலர்த்திப் பதப்படுத்துதல் என்பது ஈரப்பதத்தினைக் குறைப்பது மட்டுமல்லாமல் பற்களுக்கு வெண்மை நிறம் கொடுக்கவும், பற்கள் நெருக்கமாகவும், தடிமனாக இருப்பதற்கும், தூக்கநிலையில் இருப்பதற்கும் உதவுகின்றது. பருவ காலம், அறுவடை நேரத்தைப் பொறுத்து பதப்படுத்தக்கூடிய முறை வேறுபடுகின்றது.

அறுவடை மற்றும் பதப்படுத்துதல்

அறுவடை செய்வதற்கு பத்து நாள்களுக்கு முன்பே நீர்ப் பாய்ச்சுதலை நிறுத்திவிட வேண்டும். அறுவடை செய்யும் போது பூண்டு செடியை வேருடன் பிடுங்கி எடுத்து பின் உலர்த்திப் பதப்படுத்த வேண்டும். பூண்டினை வேரோடு பிடுங்கிய பின்னர் அப்படியே நிலத்தில் வைத்து, தழைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும் வரை பதப்படுத்த வேண்டும். பூண்டின் வெளிப்புறத்தில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைப்பதும், அதன் கழுத்துப் பகுதியை நன்றாக உலரவைப்பதும் பூண்டு பதப்படுத்தலில் அவசியமாகும். இல்லையெனில் அதிக ஈரப்பதத்தினால் சேமிப்புக்காலங்களில் அழுகல் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

செயற்கையாக உலர்த்தி பதப்படுத்துதல்

  • மூடிய அறையில் பூண்டு கட்டுகளை வைத்து 27 முதல் 35° செல்சியஸ் வெப்பக் காற்றைச் செலுத்துவதன் மூலம் பூண்டு உலர வைக்கப்படுகின்றது. காற்றின் ஈரப்பதம் 60 முதல் 75 சதம் இருக்குமாயின் பதப்படுத்துதல் முடிவதற்கு 48 மணி நேரம் தேவைப்படுகின்றது.
  • கழிக்கப்பட்ட பின்னர் அளவுகோலுக்கேற்றவாறு தரம் பிரிக்கப் படுகின்றது. முதல் தரம் (Extra class) - குறைந்தது 45 மி.மீ. விட்டம் மற்றும் அதற்கு மேல் இரண்டாம் தரம் - குறைந்தது 35 - 30 மி.மீ. விட்டம் மற்றும் அதற்கு மேல் மூன்றாம் தரம் - குறைந்தது 30 மி.மீ. விட்டம் மற்றும் அதற்கு மேல் என்ற வகையில் தரம்பிரிக்கப்படுகின்றன.

புகைமூட்டம் மூலம் உலர வைத்துப் பதப்படுத்துதல்

தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் (கொடைக் கானல் மற்றும் ஊட்டி) அறுவடைக்குப் பின் புகை மூட்டம் போடப்பட்டு பூண்டுகள் பதப்படுத்தப் படுகின்றன. இப்புகை விவசாயிகளின் வீட்டில் சாதாரண முறையில் அடுப்புகளைக் கொண்டு போடப்படுகின்றது.

தரம்பிரித்தல்

  • உலர்த்திப் பதப்படுத்திய பின்னர் முழுப் பூண்டு ஒவ் வொன்றையும் அதன் எடை அளவிற்கேற்றவாறு இயந்திரம் மூலமாகவோ, வேலையாட்கள் மூலமாகவோ தரம் பிரிக்கப்படுகின்றது. தடிமனான கழுத்துப்பகுதி, பிளவுற்ற பற்கள், காயம்பட்ட பற்கள், நோய் பூச்சித் தாக்குதலுக்குட்பட்ட பற்கள் வெற்றிடம் பற்கள் ஆகியவை கழிக்கப்படுகின்றன.
  • அவ்வாறு சிப்பம் கட்டுதல் பெரும்பாலும் இந்தியாவில் (முக்கியமாக நாசிக் போன்ற நகரங்களில்) முழுப்பூண்டு வலையமைப்புடன் கூடிய சணல் பைகளில் அடைக்கப்பட்டு பயன் படுத்தப்படுகின்றது. எனினும், பூண்டில் தரம் பிரித்தல், சிப்பம் கட்டுதல் போன்ற விதிகளுக்கேற்ப 18, 25 கிலோ எடை கொண்ட சொசொரப்பான பிளை பெட்டிகளில் அடுக்கி வைத்து ஏற்றுமதி செய்வதே முறையாகும். நைலான் வலைப் பைகளில் அடைக்கும் பொழுது சேமிப்புக் காலங்களில் ஏற்படும் இழப்பு வெகுவாக குறைக்கப்படுகின்றது.
  • 5 செ முதல் 10 செ வெப்பநிலை 60 - 70 சதவிகித ஈரப்பதத்தில் 50 முதல் 80 நாள்களுக்கு தரமான பூண்டை சேமிக்கலாம். புறஊதா விளக்கு உள்ள கிடங்கில் 30 நிமிடங்களுக்கு பூண்டை வைத்திருந்தால் சேமிப்புக் காலம் 100 முதல் 150 நாள்கள் வரை நீளும்.
  • பூண்டு பற்கள் 4.4° செ வெப்பநிலையில் முளைத்து விடுவதால் நீண்ட காலத்திற்கு இதை சேமித்து வைக்க இயலாது. 70 சத காற்றின் ஈரப்பதத்திற்கு மேல் பற்களை சேமித்து வைக்கும் பொழுது அழுகி விடுவதால் விஞ்சாண்களின் பாதிப்பு அதிகரிக்கின்றது. எனவே, 32-36் பெரன்ஹிட் வெப்ப நிலையில் குளிர் பதனப்படுத்தலாம்.

சேமிப்புக் கிடங்கு

போதிய அளவிற்கு உலர்த்தி பதப்படுத்தப்பட்ட முழுப்பூண்டுகள் காற்று தாராளமாகப் புகக்கூடிய சாதாரண அறைகளில் பாதுகாக்கப்படுகின்றன. முழுப்பூண்டு தழைகளுடன் கூடிய தண்டுப் பகுதியுடன் இருக்கும் பட்சத்தில் காற்றோட்டமுள்ள அறைகளில் தொங்கவிடப்படுகின்றன.

English Summary: Post harvest management in Garlic Published on: 05 December 2018, 11:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.