1. தோட்டக்கலை

தோட்டக்கலை பயிர்களில் அதிக லாபம் தரும் கீரை சாகுபடி பற்றிய தகவல்

KJ Staff
KJ Staff
Leafy Greens

உடல் ஆரோக்கியத்திற்கு தினம் ஒரு கீரை உண்ண வேண்டும். எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய கீரையினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளலாம். பொதுவாக கீரை சாகுபடியினை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தை தவிர்த்து மற்ற சமயங்களில் விதைக்கலாம். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது சமப்படுத்த வேண்டும்.

இரகங்கள்

  • கோ 1 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
  • கோ 2 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
  • கோ 3 (கிள்ளுக்கீரை மற்றும் அரைக்கீரை)
  • கோ 4 (தானியக் கீரை)
  • கோ 5 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)

மண் மற்றும் தட்ப வெப்பநிலை

நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.

கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.

பருவம்

ஆண்டு முழுவதும் பயிர்  செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று முறை நன்கு உழவேண்டும். எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்க வேண்டும்.

Process of leafy green gardening

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல்: எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல்சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.

விதையளவு: எக்டருக்கு 2.5 கிலோ

விதைத்தல் : விதைகள் மிகவும் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிட வேண்டும்.

நீர்ப்பாய்ச்சுதல்: விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

விதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. எனினும் இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

Green-leafy-vegetables

அறுவடை

அரைக்கீரை: விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்க வேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை  செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்.

முளைக்கீரை: விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்.

தண்டுக்கீரை: விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.

தானியக்கீரை: விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.  தானியக்கீரை எக்டருக்கு 2.4 டன்கள்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Know more about getting started with your own Leafy Greens Gardening for beginners Published on: 10 October 2018, 05:15 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.