1. வாழ்வும் நலமும்

டெங்கு காய்ச்சல்: நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

R. Balakrishnan
R. Balakrishnan
Dengue Fever

மழைக் காலத்தில் 'டெங்கு' காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களை காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. கடந்த 19-ம் நுாற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலற வைக்கும் முக்கியமான நோய்.

டெங்கு பற்றிய பயமும், உயிரிழப்பும் முழுவதுமாகக் குறைய, அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
சுகாதாரமற்ற சூழல் தான் டெங்கு பரவுவதற்கான அடிப்படை காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

டெங்கு காய்ச்சல்

'டெங்கு' எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு 'டெங்கு காய்ச்சல்' என்று பெயர். 'டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, 'எலும்பு முறிவுக் காய்ச்சல்' என்று பொருள். இந்தக் காய்ச்சலின்போது எலும்பு முறிவு ஏற்பட்டது போல, உடலில் கடுமையான வலி தோன்றும்.

எப்படி பரவும்?

கொசுவால் மட்டுமே பரவுகிறது. 'ஏடிஸ் எஜிப்தி' எனும் கொசுக்கள் நம்மை கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.

எப்படி பரவாது?

இது, தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றாலும் மற்றவருக்கு பரவாது.

ஏடிஸ் கொசு

ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும் தான் மனித னுக்கு இந்த நோயை பரப்புகிறது.

யாருக்கு ஆபத்து அதிகம்?

குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.

அறிகுறிகள்

  • திடீரென கடுமையான காய்ச்சல்
  • 104 டிகிரி பாரன்ஹீட் அல்லது 40 டிகிரி செல்ஷியஸ் வரை உடலில் உஷ்ணம் இருக்கும்.
  • அதிகமான தலைவலி
  • கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்.
  • இதோடு, எலும்புகளை முறித்து போட்டதை போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது
  • இரண்டு நாட்கள் இடைவெளியில் விட்டு விட்டு காய்ச்சல் வருவது
  • காய்ச்சலின் போது வாய் பகுதியை சுற்றிலும் நிறம் மாறுவது
  • கண்கள் சிவந்து காணப்படுவது மற்றும் முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது.

உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு

பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாட்களில் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ், மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்து விடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை.
ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், பல் ஈறு, சிறுநீர் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

என்னென்ன பரிசோதனைகள்?

ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதி செய்ய, காய்ச்சல் ஆரம்பித்த ஏழு நாட்களுக்குள், 'ஆர்.என்.ஏ., பாலிமேரேஸ் செயின் ரியாக் ஷன் டெஸ்ட்' மூலம் ரத்தத்தில் டெங்கு வைரஸ் கண்டறியப்படும்.
பின், எந்த வகையான டெங்கு காய்ச்சல் என்று கண்டறிய உதவும் பரிசோதனைகள் உள்ளன. பொதுவாக ஒருவருக்கு ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை, 1 மில்லி லிட்டரில் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு, தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து விடலாம். எனவே, அதே நாளில், 'ப்ளேட்லெட்' என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின்படி இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து கொள்ள
வேண்டும்.

என்ன சிகிச்சை?

டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலை கட்டுப்படுத்த 'பாராசிட்டமால்' மாத்திரையும், உடல் வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே டெங்கு அதிர்ச்சி நிலை ஏற்படும். அதற்கு, 'குளூக்கோஸ்' மற்றும் 'சலைன்' தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட, நரம்பு மூலம்தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

நோயுற்ற காலத்தில்

காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தடுக்க என்ன வழி?

டெங்குவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்க விடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால், சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றும் வரை காத்திராமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள். குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்து வைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். மருந்தகங்களில் சுயமாக மருந்து, மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது. வரும் மழைக் காலங்களில் கொசுவிடமிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்!

மேலும் படிக்க

கொசுத் தொல்லைக்கு குட் பை சொல்லும் அணு விஞ்ஞானம்: தமிழக விஞ்ஞானி சாதனை!

கொரோனாவைக் குணப்படுத்த வந்தாச்சு மாத்திரை: பிரிட்டனில் அனுமதி!

English Summary: Dengue Fever: How to Protect Us? Published on: 07 November 2021, 08:52 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.