
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயிலுக்கு இடையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக இந்த மழை பெய்ய இருக்கிறது.
அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் நாளை மறுதினம் (சனிக்கிழமை) வரையிலான 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுதினம் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யக் கூடிய பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், மழை காரணமாக அந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதோடு சென்னையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது... கடும் வெப்ப அலை நிலவி வந்த சென்னைக்கு இந்த மழை குளிர்ச்சியை தந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் வரை பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் பொதுவாக கோடை மழை என்பது அபூர்வமாகவே இருக்கும். அந்த வகையில் இன்று காலை பெய்த மழையும் இருந்தது.
சூடாக இருந்த சென்னையின் நிலப்பரப்புகள் எல்லாம் அப்படியே குளிரத்தொடங்கின... கடும் வெயிலால் கட்டாந்தரைகள் எல்லாமே காய்ந்து கிடந்த நிலையில், மழை மண்ணின் வாசனையையே மாற்றியது.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குடி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த திடீர் கோடை மழை பெய்தது.. அதேநேரம் என்ன தான் கோடை மழை பெய்தாலும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
இதனிடையே இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Read more:
ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
Share your comments