Sebastian Fuchs, German Embassy Spokesperson
கிரிஷி ஜாக்ரன் தலைமையகத்திலுள்ள KJ Chaupal-ல் இன்று நடைப்பெற்ற அமர்வில் சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கான ஜெர்மன் தூதரக செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் ஃபுச்ஸ் பங்கேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இந்தியா பசுமை வாயிலான மாற்றத்தை திறம்பட மேற்கொள்ள ஆண்டுதோறும் 1 பில்லியன் யூரோக்களை ஜெர்மன் வழங்குகிறது எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வருகிறது கிரிஷி ஜாக்ரான். இந்நிலையில், கிரிஷி ஜாக்ரானின் KJ Chaupal-க்கு விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள், பன்முக ஆளுமைகள் என வேளாண் துறை சார்ந்து இயங்கும் பலரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர். அந்த வகையில், இன்றைய தினம் ஜெர்மன் தூதரக செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் ஃபுச்ஸ் பங்கேற்று இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு இடையேயான வேளாண் துறை சார்ந்த புரிந்துணர்வுகள், அதன் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்.
GSDP செயல்பாடுகள் என்ன?
KJ Chaupal-ல் நடைப்பெற்ற அமர்வில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினரான செபாஸ்டியன் அவர்களை, கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் MC டொமினிக் வரவேற்று பேசினார். அதன் தொடர்ச்சியாக, செபாஸ்டியன் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன் உரையாற்றிய விவரங்கள் பின்வருமாறு-
பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக் கூட்டாண்மை (GSDP-Green and Sustainable Development Partnership) அடிப்படியில் இந்தியாவின் பசுமை மாற்றத்திற்காக ஜெர்மனி அளித்து வரும் உதவிகள் குறித்து அவர் எடுத்துரைத்தார், நிலையான வேளாண்மை மற்றும் பசுமை இயக்கம் போன்ற முன்முயற்சிகளை தன் உரை முழுவதும் முன்னிலைப்படுத்தினார்.
இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மை குறித்து குறிப்பிட்ட செபாஸ்டியன், ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு, வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளில் ஜெர்மனி இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார்.
GSDP முன்முயற்சி குறித்து தெரிவிக்கையில், ஜெர்மன் தூதரகம் சமீபத்தில் இந்தியாவுடன் GSDP உரையாடல் தொடரை வேகப்படுத்தியுள்ளது என்றார். இது பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இந்திய-ஜெர்மன் கூட்டாண்மையை முன்னேற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றார்.
ஆண்டுக்கு 1 பில்லியன் யூரோ:
மே 22, 2022 அன்று, பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கையெழுத்திட்ட இந்த கூட்டாண்மை, விவசாயம் உள்ளிட்ட நிலையான வளர்ச்சித் துறையில் இந்தியாவின் வலுவான பங்காளியாக ஜெர்மனியின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“GSDP-யின் கீழ் இந்தியாவின் பசுமை மாற்றத்தை ஆதரிப்பதற்காக ஜெர்மனி ஆண்டுதோறும் 1 பில்லியன் யூரோக்களை வழங்குகிறது. இந்த கூட்டாண்மை பசுமை ஆற்றல் மாற்றம், பசுமை இயக்கம், பல்லுயிர் மறுசீரமைப்பு, வேளாண்மையியல் மற்றும் இயற்கை வள மேலாண்மை ஆகியவற்றில் முன்முயற்சிகளை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, கேரளாவில் மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து, வாடிக்கையாளர்களை விரைவாகவும் நிலையானதாகவும் சென்றடையச் செய்து, அவர்களின் லாபத்தை அதிகரிக்கச் செய்தோம்.” என்றார்.
மேலும் கூறுகையில், “காலநிலை மாற்றத்தை திறம்பட எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் பங்கேற்பு முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் இந்த கணிசமான நிதி உதவிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். GSDP-யின் கீழ், நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் பல திட்டங்களில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஜெர்மனியில், ஒவ்வொரு சில நூறு மீட்டருக்கும் ஆர்கானிக் பல்பொருள் அங்காடிகள் காணப்படுகின்றன ”என்றார்.
Sebastian Fuchs along with the Krishi Jagran Team
மேலும், விவசாய சமூகங்களை இணைக்கும் வகையில் ஒரு நெட்வொர்க்கினை உருவாக்கி ஊடக அமைப்பாக இயங்கி வருவதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் எம்.சி.டொமினிக்கை, செபாஸ்டியன் மனம் திறந்து பாராட்டினார்.
Read more:
பூசா பாஸ்மதி 1979- பூசா பாஸ்மதி 1985 அரிசி வகைகளின் விதை விற்பனை தொடக்கம்!
தீவிர புயலுக்கு வாய்ப்பா? தமிழகத்திற்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை!
Share your comments