Credit : Maalaimalar
பள்ளி என்பது கோயிலாகப் பாவிக்கப்படுவதால், அங்கு படிக்க வருவோர், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அனைவருக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டு வருகிறது.
பாலினப் பாகுபாடற்ற சீருடை (Gender-neutral uniform)
ஆனால் இதைவிட சற்று கூடுதலாக சிந்தித்த, கேரள அரசு பள்ளி ஒன்று, வித்தியாசமான முயற்சியாக, ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான பாகுபாடற்ற சீருடையை வழங்கியிருக்கிறது.
கேரள மாநிலம் பாலுசேரியில் உள்ள அந்த அரசுப்பள்ளியில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம் (Gender equality)
கேரளாவில் பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் பாலினப் பாகுபாட்டை அகற்றும் வகையில் ஆண், பெண் இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளி சீருடையில் பாலின பாகுபாட்டை அகற்றும் விதமாக மாணவர்களுக்கு பாலின பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்தி உள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தின், பாலுசேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் 200 மாணவிகள் ஆண்களைப்போல மேல் சட்டையும், பேண்டும் (Shirt and Pant)அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர்.
முதல்வர் பெருமிதம்
இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், சீருடை மாற்றம் குறித்து பணியாளர் கவுன்சில் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டங்களில் கலந்து ஆலோசிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த சீருடை மாற்றம் மாணவிகளுக்கு கூடுதல் சவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. விளையாட்டுகள் மற்றும் இதர போட்டிகளில் கலந்து கொள்ள இந்த உடை மாணவிகளுக்கு ஏதுவாக அமையும் என்று கூறியுள்ளார்.
2018ல்
கேரளாவில் முதல்முறையாக பாலின பாகுபாடற்ற சீருடை எர்ணாகுளம் மாவட்டத்தின் வலையஞ்சிரங்காராவில் உள்ள பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கடற்கரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!
Share your comments