Farmer Mandhaiyan cultivates Karunai Kilangu
மதுரை மேலுார் அம்பலக்காரன்பட்டி என்ற ஊரில் விவசாயி மந்தையன், நிழல்வலை குடிலில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்து அசத்தியுள்ளார். அவரின் விவசாய அனுபவத்தை கூறுகையில், இரண்டரை ஏக்கர் நிலத்தில் 50 சென்டில் வாழை, 50 சென்டில் கருணைக்கிழங்கு மீதி கரும்பு பயிரிட்டுள்ளேன். கருணைக்கிழங்கு 7 - 8 மாத பயிர். வயலில் நிழல் இருந்தால் நன்கு வளரும். நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறையினர் நிழல் வலை குடில் அமைக்க அறிவுறுத்தினர். உதவி இயக்குனர் நிர்மலா ஆலோசனையின் பேரில் 500 சதுர மீட்டரில் நிழல்வலை குடில் அமைத்தேன். 50 சதவீதம் மானியமாக ரூ.ஒரு லட்சத்து 77ஆயிரத்து 500 கிடைத்தது.
கருணைக்கிழங்கு சாகுபடி (Karunai Kilangu Cultivation)
20 - 25 செ.மீ., இடைவெளியில் கயிறு மூலம் வரிசை பார்த்து 150 கிலோ கருணைக்கிழங்கு நடவு செய்தேன். நடவு செய்த ஏழாம் நாள் களை எடுத்தேன். 40ம் நாள் முளைவிட்டு வெளியே வரும். மூன்று மாதத்தில் இலைகள் படர்ந்து அடர்த்தியாகும் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து களை எடுத்தோம். இதற்கு தண்ணீர் நிறைய தேவைப்படும். கிணறு இருந்தாலும் இந்தாண்டு மழை பெய்து தண்ணீர் கிடைத்தது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் பண்ணை குட்டை அமைத்தேன்.
20அடி நீள, அகலத்தில் 3 அடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம் கிடைத்தது. இப்போது குட்டையில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதை பயிர்களுக்கு பாய்ச்சுகிறேன்.
நிழல் வலை (Shade net hut)
நிழல் வலையில் இலைகள் பசுமையாக இருக்கும். பூச்சித் தாக்குதல் குறைவு. மண்புழு உரம், மீன்அமிலம், சூடோமோனஸ், டிரைகோ டெர்மா விரிடி போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தினேன். ஏழாம் மாதத்தில் மூடைக்கு 60 கிலோ வீதம் 1500 கிலோ கிழங்கு கிடைத்தது. விலை குறைந்ததால் லாபம் சற்று குறைந்தது. நல்ல விலை கிடைத்திருந்தால் நிறைய லாபம் கிடைத்திருக்கும். அடுத்து நிழல்வலை குடிலில் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வேன் என்றார்.
மேலும் படிக்க
பாசனத்திற்கு வைகை தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
பஞ்சு விலை உயர்வு: விவசாயிகள் பருத்தி சாகுபடியை அதிகரிக்க அறிவுறுத்தல்!
Share your comments