சித்திரை மாதம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கோடையை இயற்கையான முறையில் சமாளிக்க, மண்பானையை வாங்க தொடங்கி உள்ளனர்.
மதுரை, தேனி போன்ற தென் மாவட்டங்களில் கோடை துவங்குவதற்கு முன்பாக அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலை பதிவாகியுள்ளது. தற்போது மக்கள் இயற்கை சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ள நிலையில், தாகத்தை தணிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண்பானையை உபயோகிக்க தொடங்கி உள்ளனர். தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மினரல் வாட்டரை விட பன்மடங்கு ஆரோக்கியம் தருவது மண்பானை தண்ணீர் ஆகும்.
இது குறித்து மண்பானை வியாபாரி ஒருவர் கூறுகையில், மக்கள் மண்பானைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தற்போது பெரிய மண்பானை ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சித்திரை மாதங்களில் பானை விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாக தெரிவித்தார். மண்பானை பயன்படுத்துவோர், அதில் சிறிதளவு வெட்டி வேரை போட்டு குடிக்கும் போது, இயற்கையாகவே தாகம் தணிவதுடன், வெக்கை அயற்சி, உடல் சூடு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது, என்றார்.