மத்திய அரசு விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. மாவட்டம், வட்டாரம் வாரியாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நீர்ப்பாசன வசதிகளை அமைக்க தேவையான உதவிகளை செய்து வருகிறது. மேலும் முழு மானியத்தில் பாசனக் கருவிகள் பெற வந்தவாசி வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்
மானிய விவரம்
சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் அமைத்திட 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அறிவிக்கப் பட்டுள்ளது. முழு மானியமாக பாசனக் கருவிகள் வாங்க ரூ.32,300 வரை கொடுக்கப் பட உள்ளது. பாசனத்திற்கு தேவையான பைப்புகள், மின்மோட்டார், தொட்டிகள் அமைக்க சிறு, குறு, பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அறிவித்துள்ளது. அதன்படி பிவிசி குழாய்கள் அமைக்க ரூ.10,000, மின்மோட்டார் பொறுத்த ரூ.15,000, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்திட ரூ.40,000 என வழங்க பட உள்ளது.
நெல், கரும்பு, உளுந்து மற்றும் மணிலா பயிரிடும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெறலாம். இத்திட்டங்கள் குறித்த மேலும் விவரங்களுக்கு செல்லிடப்பேசியில் இருக்கும் உழவன் செயலியை பயன்படுத்தலாம் அல்லது அருகில் இருக்கும் வேளாண் துறை அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.