தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.200 வரை உயர்ந்தது. அதை தொடர்ந்து தற்போது உருளைக்கிழங்கின் விலையும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. காலம் தவறிய பருவமழையே விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
ஒரு மாதத்தை கடந்தும் பல முக்கிய நகரங்களில் வெங்காய விலை ரூ.140 முதல் 170 வரை விற்பனையாகிறது. இந்நிலையில் வெங்காயத்தை போன்று உருளைக்கிழங்கின் விலை அதிகரித்து வருகிறது. டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் உருளைக்கிழங்கின் விலை 75 சதவீதம் அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் பெய்த மழையால் உருளைக்கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், உ.பி., மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் பெய்த மழையே இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.40 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்க படுகிறது. எனினும் ஒரு வார காலத்திற்குள் விலை குறையும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.