இந்திய வேளாண் வளர்ச்சியில், தோட்டக்கலை துறைக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. சமீப காலமாக அதிக வருவாய் ஈட்டும் துறையாகவும் பரிமாணம் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினையும், பண்ணை நிலங்களை முறையாக பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதற்கான வாயப்புகளையும், வழிகாட்டுதலையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகிறது. இவர்களை ஊக்குவிக்கும் விதமாக மானியங்களை அறிவித்து வருகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்கறிகள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ரூ.30 கோடி மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நிலவி வரும், காய்கறிகள் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு, தோட்டக்கலைத் துறை திட்டமிட்டு வருகிறது. மத்திய – மாநில அரசுகளின் நிதியில், தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், மாநில காய்கறிகள் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டு காய்கறிகளான கத்தரி, வெண்டை, சிறிய வெங்காயம் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏக்கருக்கு, குறைந்தது ரூ.8,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.20,000 வரை மானியம் கிடைக்கும். தற்போது சாகுபடிக்கு உகந்த சூழல் உள்ளதால், இத்திட்டத்தை துரிதமாக செயல் படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு, அதன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Anitha Jegadeesan
Krishi Jagran