Farm Info

Monday, 21 November 2022 06:44 PM , by: Elavarse Sivakumar

கரும்பு உற்பத்தியில் நஷ்டம் ஏற்படுவதால் திருப்பூர் கரும்பு விவசாயிகள் தங்கள் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறைந்த ஆர்வம்

கரும்பு அறுவடை மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மடத்துக்குளம் விவசாயி சண்முகம் கூறுகையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு இயந்திர கோளாறுகள், நிர்வாக குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. கரும்பு சாகுபடியில் நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப் பயிர்களை நாடிச் சென்றனர்.

தென்னை நடவு

சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்கத் தயங்கும் சூழல் ஏற்படும். மேலும் கரும்பு பூத்து விடும் நிலை வரை சர்க்கரை ஆலைகள் வெட்டாமல் விடுவதால் இந்தப் பயிரே செய்ய வேண்டாம் என தென்னை நடவு செய்ய ஆரம்பித்துள்ளனர்” என்றார்.

கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க...

ஆதார் அட்டைதாரர்களுக்கு ரூ.4.78 லட்சம்- விபரம் உள்ளே!

சம்பா பயிரை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)