திருச்சி, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் வாழை சாகுபடியில் முதல் பயிர் பழத்திற்காகவும், மறுதாம்பு இலைக்காகவும் பயன்படுகிறது. கோவை, திருச்சி, தஞ்சாவூர், வேலுார், திருவண்ணாமலையில் பழத்திற்காக மட்டும் பயிரிடப்படுகிறது. முதல் பயிர் முழுமையாக அறுவடை செய்யும் வரை பக்க கன்றுகளில் வளரும் இலைகளை விற்று வருமானத்தை பெருக்கலாம். பூவன் (மஞ்சள் வாழை) தான் இலைக்காகவே பயிரிடப்படும் ரகங்களில் 70 சதவீத பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. பூவன் ரகத்தில் இலைகள் மென்மையாகவும் எளிதில் கிழியாததாகவும் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்ல ஏற்றதாகவும் உள்ளது.
வாழையிலை (Banana Leaf)
கற்பூரவல்லி, மொந்தன் ரகங்கள் தலா 15 சதவீத பரப்பளவில் இலைக்காக சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல வடிகால் வசதியுள்ள மணல், வண்டல், குறுமண் கலந்த நிலங்கள் வாழை பயிரிட ஏற்றது. தோட்டக்கால் நிலங்களில் மார்கழி, தை பட்டமும் (டிசம்பர், ஜனவரி), ஆனி, ஆடி பட்டமும் (ஜூலை, ஆகஸ்ட்) வாழை நடும் சிறந்த பருவங்கள்.
வாழை சாகுபடி (Banana Cultivation)
பழத்திற்கான சாகுபடி எனில் 7க்கு 7 அடி இடைவெளியில் 888 கன்றுகளும் இலைக்காக எனில் 4.5க்கு 4.5 அடி இடைவெளிக்கு 2150 கன்றுகள் ஒரு ஏக்கருக்கு தேவை. நடவிற்கு மூன்று மாத வயதுள்ள ஈட்டி இலைக்கன்றுகளே சிறந்தவை.
கன்றுகளை நடுவதற்கு முன்பு வேர்களை நீக்கி கிழங்கின் மேல் உள்ள அழுகிய, நூற்புழுவின் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகள் இருந்தால் நீக்கிவிட வேண்டும். நூற்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த கன்றின் கிழங்குகளை களிமண் குழம்பில் நனைத்து 40 கிராம் கார்போபியூரான் குருணை மருந்து இட்டு நட வேண்டும். வாழையின் முன் வளர்ச்சி பருவத்தில் கிழங்கு கூன் வண்டுகள் மற்றும் முடிகொத்து நோயை பரப்பும் அசுவினியை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு 3கிலோ வரை பயன்படுத்தலாம்.
வருமானம் (Income)
நடவு செய்த 6 மாதங்கள் வரை இலைகளை பறிக்கக்கூடாது. அதன் பின் தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை ஒருநாள் விட்டு ஒருநாள் இலைகளை அறுவடை செய்யலாம். பருவகாலத்தை பொறுத்து ஒரு இலை உற்பத்தியாவதற்கு 7 முதல் 15 நாட்களாகும். பூவன் ரகத்தில் மரம் ஒன்றில் 32 முதல் 36 இலைகள் 8 முதல் 9 மாதங்களில் உற்பத்தியாகிறது. ஒரு ரூபாய் செலவு செய்தால் ரூ.3.5 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
இளங்கோவன்
வேளாண்மை இணை இயக்குனர்
காஞ்சிபுரம்
98420 07125
மேலும் படிக்க