Farm Info

Sunday, 09 January 2022 09:13 AM , by: Elavarse Sivakumar

Credit :Dinamalar

வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை மூலம்‌ விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, வாடகைக்கு வழங்கப்படும்‌ வேளாண்‌ இயந்திரங்களை, விவசாயிகள்‌ வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன்‌ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இ-வாடகை செயலி

இதனை முதலமைச்சர் ஸ்டாலின்‌ தொடங்கி வைத்தார்‌. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இ-வாடகை ஆன்லைன் செயலியின்‌ மூலம்‌, வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையின்‌ செய்திகள்‌ மற்றும்‌ திட்டங்களை விவசாயிகள்‌ உடனுக்குடன்‌ தெரிந்து கொள்ள இயலும்.
இதுதவிர, விவசாயப்‌ பெருமக்கள்‌, தங்களுக்கு ஏற்படும்‌ சந்தேகங்களை இச்செயலியின்‌ மூலம்‌ வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இயந்திரமயம்

மேலும்‌, ரூ.50.73 கோடி மானியத்தில்‌, விவசாயிகளுக்கு 2118 வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகளை மானியத்தில்‌ வழங்குதல்‌, 230 வட்டார, கிராம மற்றும்‌ கரும்பு சாகுபடிக்கேற்ற வாடகை மையங்கள்‌ விவசாயிகள்‌, கிராமப்புற இளைஞர்கள்‌, தொழில்‌ முனைவோர்கள்‌, பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள்‌ மற்றும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்புகள்‌ மூலம்‌ நிறுவுதல்‌ போன்ற வேளாண்‌ இயந்திரமயமாக்கும்‌ திட்டத்தையும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

பயன்பாட்டின் அவசியம் (Necessity of application)

இத்திட்டத்தின்‌ மூலம்‌, வேளாண்மையில்‌ இயந்திரங்கள்‌, கருவிகளின்‌ பயன்பாட்டின்‌ அவசியத்தை உணர்ந்து, வேளாண்‌ பணிகளை குறித்த நேரத்தில்‌ மேற்கொள்ள முடியும். வேளாண்‌ தொழிலாளர்கள்‌ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் இயலும்.

பயிர்‌ சாகுபடிச்செலவினைக்‌ குறைக்கவும்‌, நவீனத்‌ தொழில்‌ நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை மேம்படுத்திடவும்‌, வேளாண்மை இயந்திரமயமாக்குதல்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு 2021-22 ஆம்‌ நிதியாண்டில்‌ தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்‌ இயந்திரங்கள்‌, கருவிகளை மானியத்தில்‌ வழங்கும்‌ திட்டம்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ தங்கள்‌ வருவாயை அதிகரிக்கவும்‌, இளைஞர்களை விவசாயத்‌ (தொழிலில்‌ ஈர்க்கவும்‌, விவசாயிகள்‌, கிராமப்புற இளைஞர்கள்‌, தொழில்முனைவோர்‌, பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்புகள்‌ மூலம்‌ வாடகை மையம்‌ அமைக்கும்‌ திட்டங்கள்‌ ஒன்றிய, மாநில அரசின்‌ நிதி உதவியோடு செயல்படுத்தப்படுகிறது.

மானியம் (Subsidy)

தனிப்பட்ட விவசாயிகளுக்கு டிராக்டர்‌, பவர்‌ டில்லர்‌, நெல்‌ நாற்று நடும்‌ கருவி, நெல்‌ அறுவடை இயந்திரம்‌, வைக்கோல்‌ கட்டு கட்டும்‌ கருவி, ரோட்டவேட்டர்‌, கரும்பு சோகை துகளாக்கும்‌ கருவி, தென்னை ஓலை துகளாக்கும்‌ கருவி, டிராக்டர்‌ டிரெய்லர்கள்‌, விசைக்களையெடுப்பான்‌, புதர்‌ அகற்றும்‌ கருவி, தட்டை வெட்டும் கருவி மற்றும்‌ தெளிப்பான்‌ போன்ற வேளாண்‌ இயந்திரங்கள்‌ வழங்கப்படும்.

50% மானியம் (50% Subsidy)

இவை‌ சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும்‌ பெண்‌ விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும்‌, இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும்‌ வழங்கப்படுகிறது.

இத்திட்டம்‌ சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய விரும்பும்‌ விவசாயிகள் www.agrimachinery.nic.in-ல்‌ என்ற இணைய தளத்தின்‌ வாயிலாக விண்ணப்பித்து உரிய மானியம்‌ பெறலாம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கோழி வளர்ப்புக்கு கடன் பெறுவது எப்படி? விவரம் இதோ

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)