Farm Info

Wednesday, 14 September 2022 01:44 PM , by: Elavarse Sivakumar

தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வசதிக்காக, நிலப்போர்வை அமைக்க ஏக்கருக்கு ரூ. 6,400 வீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, திருப்பூர் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1.60 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ மரங்களையும் சாகுபடி செய்யலாம். தக்காளி, மிளகாய், தர்பூசணி போன்ற பயிர்களுக்கு நிலப்போர்வை முறை நல்ல பலன் தருகிறது.

நீண்டகாலப் பயிர்கள்

இதுதவிர நீண்ட காலப் பயிர்களான வாழை, பப்பாளி, மா, கொய்யா சாகுபடியில் நிலப்போர்வை அமைத்து சிறந்த பலன் பெற முடியும். காய்கறிப் பயிர்களுக்கு ஒரு முறை நிலப்போர்வை அமைத்தால் 3 அல்லது 4 சாகுபடி வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். பயிர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ள களைகளைக் கட்டுப்படுத்தும் எளிய யுக்தியாக நிலப்போர்வை உள்ளது.

வெப்பத்தை நிலைநிறுத்த

இரவு நேரம் மற்றும் குளிர் காலத்திலும் மண்ணில் சீரான வெப்பத்தை நிலைநிறுத்தி பயிர் சிறந்து வளர்வதற்கும் முளைவிடும் தன்மையை வேகப்படுத்துவதற்கும் உதவுகிறது. நிலப்போர்வை அமைக்கப்பட்ட நிலங்களில் நுண்ணிய தட்ப வெப்பநிலை உருவாவதால் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கிறது.

நீர் பாதுகாப்பு

நிலப்போர்வை அமைப்பதால் நீர் நேரடியாக ஆவியாவது தடுக்கப்படுவதுடன், மண்ணின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படுகிறது. மடத்துக்குளம் வட்டாரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கான நிலப்போர்வைகள் வழங்கப்படவுள்ளன.இதில் ஒரு ஏக்கருக்கு ரூ. 6,400 வீதம் 25 ஏக்கருக்கு ரூ 1.60 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.

சலுகைகள்

இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மைவாடி, வேடப்பட்டி, சோழமாதேவி, கடத்தூர் ஆகிய கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)