தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கணிப்பு (Prediction)
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், 12 மணி நேரத்தில் இது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது.
பரவலாக மழை (Widespread rain)
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது.
மேலும் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலேர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
சாத்தியம் இல்லை (Not possible)
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ.29ம் தேதி
மேலும், வரும் திங்கட்கிழமை அதாவது நவம்பர் 29-ம் தேதி அன்று அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 2 நாளில் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
மிக கனமழை ( Very Heavy rain)
இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதியில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் (நவ. 25, 26) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!