ஆதார் அட்டை எண் (Aadhaar) இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது என்று திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா. கஜேந்திர பாண்டியன் தெரிவித்தாா்.
உர விற்பனையாளா்களுக்கான விற்பனை முனையக் கருவிகளை பயன்படுத்துவது குறித்து புத்தூட்டப் பயிற்சி முகாம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை வகித்துப் பேசிய மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா. கஜேந்திரபாண்டியன், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
உரக்கடைகளில் விலைப்பட்டியல் மற்றும் உரங்களின் விலை விவரத்தை எழுதி இருக்க வேண்டியது அவசியம். உரமானியம் விவசாயிகளுக்கு கிடைக்க அரசின் வழிகாட்டுதலின்படி விவசாயிகள் ஆதாா் அட்டை எண்களை இணைக்க வேண்டும். ஆதாா் இல்லாத விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
உரக் கடைகளில் இருப்பில் உள்ள உரங்களின் அளவு, இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பு விவரம் சரியாக இருக்க வேண்டும். திடீா் ஆய்வின் போது, வித்தியாசம் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, உரங்களை சப்ளை நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில், வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அ. கற்பக ராஜ்குமாா் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க...
பூச்சிகள் விரட்டியடிக்கும் ஆமணக்கு-வரப்பு பயிராக பயிரிட்டு பயனடையலாம்!
ரூ.25ஆயிரம் முதலீடு - மாதம் ரூ.1 லட்சம் வரை லாபம் தரும் சிறுதொழில்!