நெற்பயிர் சாகுபடியில் மகசூல் அதிகரிக்க ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, பயிர் பாதுகாப்புடன் நல்ல விதைகளும் அவசியம் என, திண்டுக்கல் விதைச்சான்று துறையினர் தெரிவித்துள்ளனர். விதைச்சான்று துறையால் சான்றளிக்கப்படும் விதைகளில் பாரம்பரிய குணங்கள், அதிகபட்ச முளைப்புத் திறன் இருக்கும். பிற ரக கலப்பு, பூச்சி நோய் தாக்கம் இருக்காது.
நல்விதைகள் (Well Seeds)
சான்று பெற்ற விதைகள் என்பது வல்லுனர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது), ஆதார நிலை விதை (வெள்ளை அட்டை) உபயோகித்து விவசாயிகளின் வயலில் உற்பத்தியாளர்களால் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விதைத்த 35 நாட்கள் அல்லது பூக்கும் தருணத்திற்கு 15 நாட்கள் முன்பு விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.
பூக்கும் மற்றும் முதிர்ச்சி பருவத்தில் விதையின் தரம் குறித்து ஆய்வு செய்து தரமாக இருந்தால் மட்டுமே சான்றளிக்கப்படுகிறது. பின் விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, பகுப்பாய்வில் தேறிய விதை குவியலுக்கு சான்று அட்டை வழங்கப்படும்.
இதில் 99 சதவீதம் இனத்துாய்மை கொண்ட ஆதார விதைகளுக்கு வெள்ளை அட்டையும், 98 சதவீத இனத்துாய்மை கொண்ட சான்று நிலை விதைகளுக்கு நீலநிற அட்டையும் அளிக்கப்படும்.
சான்று பெற்ற விதைகள் அதிக புறச்சுத்தம், பிற ரக கலப்பின்றி, அளவான ஈரப்பதத்துடன் இருக்கும். அவற்றை பயன்படுத்தினால் பயிர் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். கலப்படமில்லாத அதிக மகசூலை பெறலாம் என விதைச்சான்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
வேளாண் கருவிகளை மானியத்தில் பெற உழவன் செயலி பதிவு கட்டாயம்!
ரசாயன உரங்களுக்குப் பதிலாக நானோ உரங்கள்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல் !