படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB போன்ற இதர போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தேர்வர்களுக்கு பயிற்சி வழங்க சேர்க்கை நடைபெற உள்ளது.
TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடத்த தமிழக அரசினால் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 01- 01–2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் போன்றவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 15.03.2023 முதல் 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித்துறை தலைவருமான வெ.இறையன்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் www.civilservicecoaching.com என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும். தெரிவு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு வருகிற 10.04.2023 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
சர் தியாகராயா கல்லூரியில் உள்ள போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் 04.10.2017-ல் ஆரம்பிக்கப்பட்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 04.12.2018 முதல் 17.12.2022 வரை ஒன்பது அணிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டதன் மூலம் 3,268 மாணவ / மாணவியர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ஏப்ரலில் தொடங்கும் அரவைக்கொப்பரை கொள்முதல்- ஈரப்பதம் எவ்வளவு சதவீதம் இருக்க வேண்டும்?