Health & Lifestyle

Saturday, 06 August 2022 10:16 AM , by: Elavarse Sivakumar

சென்னையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், சுமார் 22 ஆண்டுகளாக சைக்கிளில் பயணம் செய்து காவல் நிலையம் வருவது, மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உடல் நலத்திற்காக சில விஷயங்களைக் கடைப்பிடித்தால், நோயில்லா வாழ்க்கை கிடைப்பது நிச்சயம் என்பதற்கு இவரே சாட்சி.

பணம் சம்பாதிப்பதற்காக எந்த கஷ்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் நாம், உடல் நலத்தைக் கருத்தில்கொண்ட, சில விஷயங்களை ஏற்க மறுக்கிறோம். ஆனால், இயந்திரமயமான வாழ்க்கையில் நோயில்லா வாழ்க்கையை வாழ முயற்சிப்பவர்களுக்கு, எடுத்துக்காட்டுதான் இந்த பெண் காவலர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பராணி. 44 வயதான இவர் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

22 ஆண்டுகள்

இந்த அவசர காலத்தில் சைக்கிளில் பயணம் செய்வதை சிலர் கவுரவ குறைவாக நினைத்து வரும் நிலையில் சென்னையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 22 ஆண்டுகளாக சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. தினமும் இவர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை சாலையில் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

மின்னல் வேக வாகனங்கள்

மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தனக்கே உரிய பாணியில் போலீஸ் சீருடையில் சைக்கிளில் செல்வதை வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
இதுபற்றி சிலர் அவரிடம் கேட்கும் போது கடந்த 22 ஆண்டுகளாக பணிக்கு சைக்கிளில் சென்று வருவதாக பெருமிதத்துடன் கூறுவதை கேட்டதும் வாயடைத்து போய் உள்ளனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் போலீஸ் பணியை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கினேன். 2001-ம் ஆண்டு ஆயுதப்படையில் பணியாற்றிய நாள் முதல் இன்று வரை நான் வசிக்கும் வீட்டில் இருந்து பணிபுரியும் காவல் நிலையம் வரை சைக்கிள் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன்.

தந்தையே வழிகாட்டி

எனது தந்தை கோவிந்த சாமி ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். அவர் பணிபுரிந்த காலங்களில் எங்களது வீட்டில் இருந்து போலீஸ் நிலையம் வரை சைக்கிளில் சென்று வருவார். இதனால் அவரது உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இன்று வரை உள்ளது. அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. இதுவரை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இதுநாள் வரை கண்ணாடி அணியாமல் பத்திரிகை படித்து வருகிறார்.இதுவே எனக்கு உந்துதலாக அமைந்தது. அவரது வழியில் நானும் சைக்கிளில் பணிக்கு சென்று வருகிறேன்.

நான் இந்த காவல் பணியில் 22ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். இதுவரை பல்லாவரம், மடிப்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்ட ஒழுங்கு, குற்றப்பிரிவு, என பணிபுரிந்துள்ளேன். தற்பொழுது கடந்த மே மாதம் நான் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பூக்கடை சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறேன்.

தினமும் 6 கி.மீ

எனது வீட்டில் இருந்து போலீஸ் நிலையம் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் இருக்கும். தினமும் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருகிறேன். அவ்வப்போது தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது பணிபுரியும் காவல் நிலையத்தில் இருந்து பாரிமுனை, திருவொற்றியூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு சைக்கிளிலேயே சென்று வருவேன்.

நோயில்லா வாழ்க்கை

இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட எந்தவிதமான உடல் பிரச்சினையும் இன்றி ஆரோக்கித்துடன் உள்ளேன். சைக்கிள் பயணம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். அவர்களும் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவதை ஊக்குவித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)