Health & Lifestyle

Sunday, 31 May 2020 05:59 PM , by: Daisy Rose Mary

சீந்தில் (Tinospora cordifolia) என்றால் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் இதன் மகத்துவத்தை தெரிந்து கொண்டால் நிச்சயம் உங்களுக்குப் பயன் தரும். பூலோக அமிர்தம் என்றும் கற்ப மருந்து (மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவும் மருந்து )என்று சொல்லும் அளவிற்கு அளவில்லா அற்புத மருத்துவ குணம் கொண்டது.

சீந்திலின் மற்ற பெயர்கள்

சீந்திலுக்கு அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்கள் உண்டு. வல்லி என்றால் கொடி என்ற அர்த்தமும் உண்டு , கொடி வகையான சீந்திலுக்கு அமிர்த வல்லி எனும் பெயரும், அமிர்தம் என்றால் அழியாத தன்மையைக் கொடுக்கும் என்ற பொருளில் அமிர்தை என்னும் பெயரும் கிடைக்கப்பெற்றது.

சீந்திலின் பண்பு

இது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகை தாவரம். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடியும் தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலமும் மூடியிருக்கும். இலைகள் அழகாக இதய வடிவில் காணப்படும். இவை மரங்களின் மேல் ஏறிப் படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாமல், காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளைக் கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றிக் கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.

இந்திய மருத்துவத்தில் சீந்தில்

பல்வேறு செல்வாக்குகளை பெயர்களைப் பெற்ற இந்த தாவாரத்தின் மருத்துவ பண்புகளும் அலாதியானது தான். இந்த மூலிகை கொடி இந்திய சித்த மருத்துவத்தால் காலங்காலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அமிர்தவல்லி இலையின் தண்டுகள் அதிகபட்ச மருத்துவ பயன்பாடு கொண்டது. மேலும் இதன் வேர்களும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நன்மைகள் மற்றும் பயன்கள் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (Food and Drug Administration)ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த மூலிகை மருந்து சாறு, தூள் மற்றும் காப்ஸ்யூல்கள் வடிவத்தில் உட்கொள்ளலாம்.

சீந்திலின் மருத்துவ குணம்

ஆயுளையே நீட்டிக்கும் சீந்தில் கொடியால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தீரா நோய்க்கு மருந்து.

சீந்தில் மூலிகை, உடலின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் நாள்பட்ட காய்ச்சலில் இருந்து விடுபட உதவுகிறது. மேலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் டெங்கு, பன்றிக் காய்ச்சல், மலேரியா போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது.

செரிமான பிரச்சனைக்கு

சீந்தில் மூலிகை அவ்வப்போது ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது, மேலும் குடல் தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் சீந்தில் மூலிகை பயன்படுத்தப்படுகிறது. அரை கிராம் சீந்தில் பொடியுடன் சிறிது நெல்லிக்காய் அல்லது சர்க்கரையுடன் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

சீந்தில் மூலிகை இரத்தச் சர்க்கரை குறைப்பானாகச் செயல்பட்டு நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. சீந்திலின் கிளைச் சாறானது அதிக அளவு இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி

சீந்தில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இந்த மூலிகை ப்ரீ ரேடிக்கல்ஸ்களுடன் (Free radicals) போராட உதவுகிறது. மேலும் இந்த மூலிகையில் இயற்கையாகவே ஆண்டி ஆக்ஸிடன்ட்களை (Anti-oxidants) கொண்டுள்ளது. இது உங்கள் செல்களை ஆரோக்கியமாக வைத்து நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. சீந்தில் மூலிகை உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி, இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம், மனச் சோர்வு, மனக் கவலை போன்ற பிரச்சனைகளைக் குறைக்க இந்த மூலிகை அற்புத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சீந்தில் ஒரு அழுத்த எதிர்ப்பு மூலிகை (adaptogenic herb) இவை உடலின் நச்சுத்தன்மையையும் குறைக்க உதவுகிறது. உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மனதை அமைதியாக்குகிறது.

ஆஸ்துமா

சீந்திலின் வேரை மெல்லுவது, அல்லது அதன் சாற்றைக் குடிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல நிவாரணியாகும், மேலும் மார்பு இறுக்கம், சுவாச பிரச்சனை, இருமல் , மூச்சுத் திணறல் போன்றவற்றுக்குச் சீந்தில் மூலிகை நல்ல பலனைத் தருகிறது.

கண் பார்வைக்கு

சீந்தில் மூலிகையின் பொடியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அது குளிச்சியான பின் கண் இமைகளில் தடவி வருவதன் மூலம் கண் பார்வை தெளிவடையும்.

முக அழகிற்கு...

வயது மூப்பு எதிர்ப்பு (Anti-aging) பண்புகளைச் சீந்தில் கொண்டுள்ளது. இதனால் இவை எப்போதும் குறைபாடற்ற ஒளிரும் தோலைத் தருகிறது. மேலும் இருண்ட புள்ளிகள் , சுருக்கங்கள் , சிறு கோடுகள் , முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைக்கச் சீந்தில் மூலிகை உதவி செய்கிறது.

சீந்தில் ஒரு இயற்கையோடு சேர்ந்த பாதுகாப்பான மூலிகை என்பதால் இதை நுகர்வதினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை, இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், மலச்சிக்கல் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை உட்கொள்வதாக இருந்தால் உங்கள் இரத்தத்தின் அளவை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். அதேபோல் கர்ப்பமாக உள்ளவர்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)