Health & Lifestyle

Friday, 14 February 2020 04:39 PM , by: KJ Staff

சப்போட்டா பழம் மிக ருசியானது என்பதை தாண்டி, பலத்தரப்பட்ட சத்துகளும் நிரம்பியுள்ளது. இப்பழம் உடனே செரிமானம் ஆக உதவுவவோடு, அதிகளவு குளுக்கோஸ் உள்ளதால் உடலுக்கு ஆற்றல் சக்தியை அதிகரிக்கிறது. 'சிக்கு' என்றும் ‘அமெரிக்கன்புல்லி’ என்றும் அறியப்படும் இப்பழம், வெப்ப மண்டலத்தில் எப்போதும் பசுமையான பழங்களை தாங்கியிருக்கும் மரமாக குறிப்பிடப்படுகிறது. ‘அக்ரஸ் சப்போட்டா’ என்னும் தாவர இயல் பெயர் கொண்ட இப்பழம், சப்போட்டேசியே என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது ஆகும். சப்போட்டாவின் தூய தமிழ்ப்பெயர் `சீமை இலுப்பை' என்பதேயாகும்.

‘மெக்சிகோ’ நாட்டினை தாயகமாக கொண்ட சப்போட்டா, இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிகளவு பயிரிடப்படுவதால் ‘சப்போட்டா மாநிலம்’ என்று அதற்கு ஓர் சிறப்பு பெயர் உண்டு. மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சப்போட்டா கணிசமாக பயிரிடப்படுகிறது.

கர்ப்பக்காலத்தில் நன்மைகளை விளைவிக்கும் சப்போட்டா

சப்போட்டா பழம் மிக எளிதாக கிடைக்கக்கூடியது என்பதுடன், மிகவும் ஆரோக்கியமானதும் கூட. கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சோர்வுடன், மயக்கத்துடன் பலவீனம் அடையும் தருணத்தில், ஆற்றல் நிறைந்த சப்போட்டா பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் குறிப்பிட்ட அளவே உட்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு உணவோ, பழமோ, காய்கறியோ சாப்பிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் உண்ண வேண்டும். இல்லையெனில், அது கர்ப்பிணி பெண்களின் உடலுக்கு நலத்தை வழங்குவதற்கு பதிலாக தீமையை அளித்து விடும். அந்த வகையில், சப்போட்டா பழத்தினை, ஒரு நாளைக்கு 100 கிராம் முதல் 120 கிராம் வரை தான் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா

  • சப்போட்டா பழச்சாறுடன் தேயிலை சாற்றினை சேர்த்து சாப்பிட்டால் இரத்தப்பேதி குணமாகும்.
  • சப்போட்டா கூழ் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது. இதயம் சார்பான கோளாறுகளுக்கு ஏற்ப, பாதுகாக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
  • இரவில் தூக்கம் வராமல் தவிப்போர், தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் சப்போட்டா சாறினை குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
  • ஒரு தேக்கரண்டி சீரகத்தோடு சப்போட்டாவை மென்று விழுங்கினால் பித்தம் விலகும். ஆரம்ப நிலை காசநோய் உள்ளோர், சப்போட்டா சாறினை குடித்து உடன் நேந்திரம் பழம் ஒன்றினை தின்றால் குணமாகும்.
  • இரத்த மூலம் உள்ளிட்ட மூல நோய்களை சரி செய்யும் இயற்கை மருந்தாக இப்பழம் கருதப்படுகிறது.
  • சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும்  பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும்.
  • இப்பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, சருமம் பளபளப்பாகும். மேலும் டானின் அதிகளவு உள்ளதால் உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களையும் தடுக்க உதவுகிறது.
  • கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ள காரணத்தினால், எலும்புகளை சப்போட்டா பழம் வலுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
  • சப்போட்டா சாற்றோடு எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் சளி சரியாகும்.
  • வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்த இப்பழம் வயதான காலத்திலும் கண் பார்வையினை மேம்படுத்துகிறது.

M.Nivetha
nnivi316@gmail.com

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)