Horticulture

Friday, 11 September 2020 09:59 PM , by: KJ Staff

இயற்கையில் கிடைக்கும் அனைத்தும் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும் என்பதை மறக்க வேண்டாம். இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் கொண்டே, பயிர்களைத் தாக்கும் பூச்சி பூஞ்சாணங்கள் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.

இயற்கை முறைக்கு மாறுவோம்

இரசாயன உரங்களைப் பயன்படுத்தி பூச்சிகளை அழிப்பதால், விளையும் பயிரின் தரம் குறைந்த விடுகிறது. மேலும், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து போகிறது. இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்குவதால், விவசாயிகளுக்கு செலவும் அதிகமாகிறது. மண்ணின் வளம் கெடுவதோடு மட்டுமின்றி, நஞ்சான உணவையே நாம் உற்பத்தி செய்து வருகிறோம்.

இந்நிலையில், நாம் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை (Chemical Insecticides) தவிர்த்து விட்டு, இயற்கையில் கிடைக்கும் சாதாரண உரங்களை வைத்தே பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக மகசூல் (Yield) பெற இயலும்.

எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான் (Endosalfan), டெமக்ரான் (Demakron) போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்டு வருகின்றன. எனவே தான் இயற்கை உரங்களைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுக்கு சிபாரிசு செய்கின்றனர்.

இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முறைகள்:

  • அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம். அப்படித் தெளிப்பதால் பூச்சிகள் அழிந்து பயிர்கள் நன்முறையில் வளரும்.

  • இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம். இதனால் புழுக்களும், பூச்சிகளும் அடியோடு அழிக்கப்படும்.

  • வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், பயிரில் ஏற்படும் நெல் குலை நோய் நீங்கி பயிர் வளம் பெறும்.

  • இலைப்பேன், வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளித்தால் போதும். பயிர்கள் செழித்து வளரும்.

  • நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.

  • 200 லிட்டர் தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மண்ணெண்ணெய் கலந்து தெளித்தால் காய் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்.

  • இலைப்பேன், மிளகாய்ப்பேன் மற்றும் வெள்ளை ஈ ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.

  • பாக்டீரியா, பூஞ்சாணம் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.

  • 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிப்பதால், அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி பயிர்களைக் காக்கலாம்.

  • கம்பளிப் புழு பாக்டீரீயாவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ சோற்றுக் கற்றாழைச் சாறு கலந்து தெளிக்கலாம்.

  • கம்பளிப்புழு சுருள் பூச்சி, இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு (Neem Leaf) கலந்து தெளிக்கலாம்.

  • நெல் தூர்அழுகல், இலை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.

  • பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.

  • நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.

  • பயறு வகை சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம்.

  • தென்னை வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

  • இன்னும் பல இயற்கை முறைகளைப் பயன்படுத்தி, நம் பயிர்களை காத்து, மகசூலை அதிகரிக்கச் செய்யலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கழிவுகளைக் கூட பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

  • இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை கைவிட்டு இயற்கைக்கு திரும்புவோம். தரமான நஞ்சில்லா உணவை (Non-Toxic) உணவை உற்பத்தி செய்து விவசாயம் காப்போம்.

மேலும் படிக்க...

நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!

மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)