வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 86 ஆயிரத்து 135 மதிப்பிலான காய்கறி, பழங்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை (Sales) செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துணை இயக்குநர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
காய்கறி, பழங்கள் விற்பனை
திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ராஜேஸ்வரி காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டு இருந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் இதுவரை முழு ஊரடங்கு (Full Curfew) காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 70 வாகனங்கள் மூலம், 627.2 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழ வகைகள் விவசாயிகளின் விளை நிலங்களில் இருந்து, நேரடியாக பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று, விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.2 கோடியே 86 ஆயிரத்து 135 ஆகும்.
நடமாடும் உழவர் சந்தைகள்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சீரிய முயற்சியால் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 6 உழவர் சந்தைகள், 14 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் மூலமாக அந்தந்த பகுதிகளில் அன்றாடம் விளையும் கத்தரி, வெண்டை, பாகற்காய், பச்சைமிளகாய், தர்பூசணி, மாம்பழம் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கி நடமாடும் உழவர் சந்தைகள் மூலமாக, தரமான பச்சை காய்கறிகள் அரசு நிர்ணயித்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் முழு ஊரடங்கு காலத்திலும் விவசாயிகள் தங்களது நிலத்தில் இருந்தபடியே நல்ல விலைக்கு விற்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீட்டில் இருந்தபடியே வாங்கவும் ஏதுவாக இருக்கிறது.
மேலும் படிக்க
வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!
டெல்டா மாவட்டங்களில் 70% தூர்வாரும் பணி நிறைவு! உழவர் நலத்துறை அமைச்சர் தகவல்!