Horticulture

Wednesday, 09 November 2022 12:40 PM , by: Deiva Bindhiya

Subsidy up to Rs 20,000 per hectare for Spice crops!

காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட பலவகையான தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பழப்பயிர்கள் மேம்பாட்டு இயக்கம், உயர் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி, மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், சுவை தாளித பயிர் ஊக்குவிப்பு போன்ற பல்வேறு தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்.

தோட்டக்கலை திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியீடு

தோட்டக்கலை மேம்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம், 2022-23 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட இனங்களை செயல்படுத்துவதற்கு ரூ.170.79 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு செயல்திட்ட அறிக்கையினை தயாரித்து, அதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதில், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் 25,680 எக்டர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு முதற்கட்ட நிதியினை விடுவித்து, அதற்கான அரசாணை வேளாண் உழவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் நோக்கம்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து, புதிய தோட்டக்கலை தொழில்நுட்பங்களை பின்பற்றி, தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதோடு, தமிழக மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தோட்டக்கலை பயிர் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எவ்வளவு மானியம்?

இத்திட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளித பயிர்கள், போன்ற தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்களை பெற்று, சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு ஆகும் மொத்த செலவில், அரசு 40% மானியம் வழங்குகிறது. பயிர் வாரியான விபரம் பின்வருமாறு.
காய்கறிகள் சாகுபடிக்கு மானியம்: கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறி பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்கு எக்டருக்கு ரூ.50,000 செலவாகும். இதில், ரூ.20,000/- மதிப்புள்ள குழித்தட்டு நாற்றுகளும், சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களும் மானியமாக வழங்கப்படுகின்றன. அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

சுவைதாளிதப் பயிர்களுக்கு மானியம்:

விதை மூலம் சாகுபடி செய்யப்படும் சுவைதாளிதப் பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.12,000/- மதிப்பில் குழித்தட்டு நாற்றுகளும், இடுபொருட்களும், கிழங்கு வகை சுவைதாளிதப் பயிர்களுக்கு, நடவு செய்த பின்னர் வயல்களை கள ஆய்வு செய்து எக்டருக்கு பின்னேற்பு மானியமாக ரூ,12,000/-ம், பல்லாண்டு சுவைதாளிதப் பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.20,000/- மதிப்பில் நடவுப் பொருட்களும் இடுபொருட்களும் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கான தகுதிகள்:

சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகை எடுத்து குத்தகையை பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிர் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்கள்.

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 

தேசிய தோட்டக்கலைத் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை http://horticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் படிக்க:

PM Kisan திட்டம் பயன்பெற e-kyc புதுப்பிக்க காலக்கெடு!

விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)