ஜெர்மன் தொழில்நுட்பத்தில், குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம், 'சிறுதுளி' அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தனர்.
'சிறுதுளி' தலைவர் பாலசுப்ரமணியன், நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், 'ராக்' தலைவர் பாலசுந்தரம், கவுரவ செயலாளர் ரவீந்திரன், 'நோ புட் வேஸ்ட்' ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் உள்ளிட்டோருடன் ஆலோசித்தனர்.
ஸ்மார்ட் சிட்டி (Smart City)
சிறுதுளி அமைப்பினர் பேசுகையில், 'குளங்களில் மேற்கொள்ளப்படும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால், நீர் தேக்கும் பரப்பு சுருங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கேற்ப முத்தண்ணன் குளம், வாலாங்குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், இவ்விரு குளங்களில் மட்டும், 32 ஏக்கர் சுருக்கப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட், துணை மின் நிலையம், டிப்போ, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு என அரசு துறைகள், குளங்களில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. நகரப் பகுதியில் பெய்யும் மழை நீர், வாலாங்குளத்துக்கு வரும். இதன் கொள்ளளவை சுருக்கினால் தண்ணீரை தேக்க முடியாது. வாலாங்குளத்தின் உபரி நீர் செல்லக்கூடிய வாய்க்காலை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
குப்பையில் மின்சாரம் (Electricity from Garbage)
இச்சந்திப்பு தொடர்பாக, வனிதா மோகன் கூறுகையில், ''குளங்களின் நீர் பரப்பை சுருக்கக்கூடாது என கூறியிருக்கிறோம். நொய்யல் உருவாகும் இடத்தில் தண்ணீர் கல்கண்டு போல் இருக்கிறது; நகர பகுதிக்குள் நுழைந்து வெளியேறும்போது கருமையாகி விடுகிறது. கழிவு நீர் கலப்பதே இதற்கு காரணம். அதனால், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். குப்பையை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்; குப்பையில் மின்சாரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஜெர்மனி இலவசமாக தர தயாராக இருக்கிறது. அத்திட்டத்தை செயல்படுத்தினால், குப்பையை எளிதாக அகற்றலாம் என்றார்.
மேலும் படிக்க
கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!