Farm Info

Tuesday, 12 January 2021 03:16 PM , by: Daisy Rose Mary

Credit : Maalaimalar

திருச்சுழி அருகே நன்கு விளைந்த பயிர்களில் குலை நோய் தாக்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விடத்தகுளம், வி.புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்களில் குலை நோய் தாக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இப்பகுதிகளில் சுமார் 250 ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் விடத்தகுளம் பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் குலைநோய் தாக்குதலால் சுமார் 70 சதவீதம் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.

நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!

இழப்பீடு வழங்க கோரிக்கை

கடன் வாங்கி சாகுபடி செய்தும், தற்போது எந்த பலனும் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் குலை நோயால் பாதிப்பினால் மாடுகளுக்கு கூட வைக்கோலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சில வழிமுறைகளை பின்பற்றி குலை நொய் பாதிப்பில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க முடியும்.

நோய்க்கான சூழ்நிலை - Circumstances for disease 

  • வருடம் முழுவதும் குலை நோய் பூசண வித்துக்கள் காற்றில் இருக்கும்.

  • நெல் வளரும் மேட்டுப்பாங்கான இடங்களின் சுற்றுப்புற அமைப்பு மற்றும் வெட்பமண்டல பகுதிகள்.

  • மேகமூட்டம் உள்ள வானம், தொடர் மழை மற்றும் துாரல்கள்.

  • அதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் (Ammonium sulphate) போன்ற தழைச்சத்து உரங்கள்.

  • காற்றின் ஈரப்பதம் (90 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகம்) மற்றும் ஈரமான இலைகள்.

  • வெப்பநிலை 25-28°C 

மேலாண்மை முறைகள் (Pest magagemet)

  • நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

  • வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.

  • நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும் கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல்.

  • கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

  • நாற்றங்கால் பருவம் : குறைந்த தாக்குதல் இருப்பின் கார்பன்டசீம் (அ) எடிஃபென்டாஸ் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

  • துார் வைக்கும் முன் நிலை முதல் துார் வைத்தலின் மத்திய நிலை வரை : குறைந்த தாக்குதலாக (2-5%நோய் தீவிரம்) இருந்தால், கார்பன்டசீம் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும்.

  • சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால் குலை நோய் தாக்குதல் குறைகின்றது. ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.

  • வயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி. அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

  • புழுதி நாற்றங்கால்களை தவிர்க்க வேண்டும்.

  •  சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)

  • 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

  • நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

பூச்சிகளிடமிருந்து பயிரைக் காக்கும் இயற்கை உரங்கள்!

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் துவம்சம் செய்யும் மண் கரைசல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)