1. விவசாய தகவல்கள்

நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்

நெற்பயிரை பல்வேறு பூச்சிகள், நோய்கள் தாக்குகின்றன, இதில் முக்கியமானதாக குலை  நோய் (Blast Disease) இருக்கிறது. இந்நோய் முதலில் சிறு புள்ளிகளாக தோன்றும் பின்பு பெரிதாகி கண் வடிவ புள்ளிகளாக மாறும். அதன் பின், நோய் தண்டு பகுதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி கணுவின் கழுத்து பகுதி உடைந்து விடும். பின் நெல் மணிகளையும் தாக்கி சேதத்தை உருவாக்குகிறது.

இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கின்றனர். எனவே இதனை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்கான சூழல், அறிகுறிகள், நோய் மேலாண்மை குறித்து பார்போம்.

நோய்க்கான சூழ்நிலை - Circumstances for disease 

  • வருடம் முழுவதும் குலை நோய் பூசண வித்துக்கள் காற்றில் இருக்கும்.

  • நெல் வளரும் மேட்டுப்பாங்கான இடங்களின் சுற்றுப்புற அமைப்பு மற்றும் வெட்பமண்டல பகுதிகள்.

  • மேகமூட்டம் உள்ள வானம், தொடர் மழை மற்றும் துாரல்கள்.

  • அதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் (Ammonium sulphate) போன்ற தழைச்சத்து உரங்கள்.

  • காற்றின் ஈரப்பதம் (90 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகம்) மற்றும் ஈரமான இலைகள்.

  • வெப்பநிலை 25-28°C

அறிகுறிகள் (Symptoms of Blast Disease) 

  • பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள் -leaf, தண்டு - Stem, கணுப்பகுதி, கழுத்துப் பகுத- Neck, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.

  • இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.

  • தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலை நோய்” (Blast Disease) என்கிறோம். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும். 

  • கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும்/பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலை நோய்” என்கிறோம்.

  • கணுக்கள் கருப்பு நிறமாக மாறி, உடைந்துவிடும். இதை “கணு குலை நோய்” என்கிறோம்.

  • பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும்.

  • கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.

மேலாண்மை முறைகள் (Pest magagemet)

  • நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

  • வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.

  • நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும் கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல்.

  • கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

  • நாற்றங்கால் பருவம் : குறைந்த தாக்குதல் இருப்பின் கார்பன்டசீம் (அ) எடிஃபென்டாஸ் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

  • துார் வைக்கும் முன் நிலை முதல் துார் வைத்தலின் மத்திய நிலை வரை : குறைந்த தாக்குதலாக (2-5%நோய் தீவிரம்) இருந்தால், கார்பன்டசீம் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும்.

  • சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால் குலை நோய் தாக்குதல் குறைகின்றது. ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.

  • வயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி. அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

  • புழுதி நாற்றங்கால்களை தவிர்க்க வேண்டும்.

  •  சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)

  • 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

  • நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

மேலும் படிக்க...

Sugar free Rice : சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் சுகர் ஃப்ரீ நெல் சாகுபடி! - RNR 15048

குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!

English Summary: Rice blast Disease Affecting Paddy Crops: Symptoms and Disease Management Published on: 27 August 2020, 04:20 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.