வேளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் வரும் 2024ம் ஆண்டு வரை, அதாவது மோடி அரசின் பதவிகாலம் முடியும்வரை, போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக விவசாயச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம் (Farmers Protest)
மத்திய அரசு வேளாண் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கடந்த ஆண்டு நவ.26-ம் தேதி முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டம் 50 நாட்களைத் தாண்டிவிட்ட நிலையில்,மத்திய அரசும் விவசாயி்களின் பிரதிநிதிகளுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
தொடரும் முட்டுக்கட்டை ( Stalemate continues)
வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்ப பெற முடியாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசும், சட்டங்கைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்தில் விவசாயிகளும் உறுதியாக இருப்பதால், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தான் உள்ளிட்ட தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என மத்திய அரசை எச்சரித்த உச்சநீதிமன்றம், இதற்காக 4 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது.
விவசாயிகள் எதிர்ப்பு (Farmers Agaist)
ஆனால், அதில் இடம்பற்றிருப்பவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்களாக உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர், குழுவில் உள்ளவர்கள் மூலம் தீர்வு காண முடியாது என கூறிவிட்டனர்.
போராட்டம் தொடரும் (Protest Continue)
இந்நிலையில் நாக்பூரில் பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் கருத்தியல் புரட்சி. வேளாண் மசோதாக்களை திரும்பபெறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு பிடிவாதமாக உள்ளது. இந்தப்போராட்டம் நீண்ட காலம் தொடரும்.
தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் பணக்கார விவசாயிகளால் தூண்டப்படுகிறது, என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், ஒவ்வொரு கிராம மக்களும் பல்வேறு சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்றார்.
2024 ம் ஆண்டு வரை (Till 2024)
மேலும் போராட்டம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்விக்கு வரும் 2024 ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். அதுவரையில் தற்போதைய மத்திய அரசு வேளாண் மசோதாவை வாபஸ் பெறாவிட்டால் 2024ம் ஆண்டு மே மாதம் வரையில் போராடத் தயாராக உள்ளோம்.நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிறது. எனவே விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ரீசார்ஜ் கார்டு மூலம் பசும்பால் வழங்கும் இயந்திரம்!
குப்பைகளை மறுசுழற்சி செய்து, இயற்கை உரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்!
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!