State

Saturday, 24 June 2023 11:43 AM , by: Muthukrishnan Murugan

Kurvai Cultivation Package Scheme- eligible Farmers list

கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணையினை திறந்து வைத்த முதல்வர் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தினையும் அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்கள் மற்றும் தொகுப்புத் திட்டத்தின் சிறப்பு குறித்த விவரங்களை விரிவாக இப்பகுதியில் காணலாம்.

தொகுப்புத் திட்டம் எந்த மாவட்டத்திற்கு?

குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகியவற்றின் அனைத்து வட்டாரங்களிலும், கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் டெல்டா வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் -2023 பயன்கள்:

உரங்கள், 100 சதவிகித மானியத்தில் விநியோகம்:

பயிர்களின் வளர்ச்சியிலும், மகசூல் பெருக்கத்திலும், உரங்கள், முக்கிய பங்கு வகிக்கின்றன. பயிர்களின் வளர்ச்சிக்கு, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அவசியமாகின்றன. இந்த சத்துக்களின் பற்றாக்குறையால், கணிசமான அளவில், மகசூல் இழப்பு ஏற்படுகின்றது. பேரூட்டச்சத்துக்கள் பொதுவாக, அடியுரமாகவும், மேலுரமாகவும் இடப்படுகின்றன.

எனவே, பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து, அதன் உற்பத்தித்திறனை மேம்படுத்திட, 2.50 இலட்சம் ஏக்கர் பரப்பிற்கு, 30,000 டன் உரங்கள், ரூ.61.6625 கோடி மதிப்பீட்டில், 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படும்.

ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் உரத்தின் அளவு:

  1. யூரியா -45 கிலோ
  2. டி.ஏ.பி -50 கிலோ
  3. பொட்டாஷ் - 25 கிலோ

நெல் விதைகள், 50 சதவீத மானியத்தில் விநியோகம்:

தரமான குறுகியகால நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 478 டன்னும், விதை மற்றும் நடவுப் பொருட்களுக்கான துணை இயக்கம் விதை கிராமத் திட்டத்தின் கீழ், 2000 டன்னும் ஆக மொத்தம் 2,478 டன் சான்று நெல் விதைகள், 50 சதவிகித மானியத்தில், 1.239 இலட்சம் ஏக்கருக்கு விநியோகிக்கப்படும்.

குறுவையில் மாற்றுப்பயிர் சாகுபடித் தொகுப்பு வழங்குதல்:

காவிரி டெல்டா மாவட்டங்களில், மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவை ஆகிய இடு பொருட்கள் அடங்கிய மாற்றுப்பயிர் சாகுபடி தொகுப்பு, 15,818 ஏக்கர் பரப்பிற்கு, மாநில நிதி மூலம் 50 சதவிகித மானியத்தில், ரூ.2.8877 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பசுந்தாள் உர விதைகள், 50 சதவீத மானியத்தில் விநியோகம்:

காவிரி டெல்டா மாவட்டங்களில், மண்வளத்தைப் பெருக்கவும், பயிர் மகசூலை அதிகரித்திடவும், 6250 ஏக்கர் பரப்பிற்கு, ரூபாய் 50 இலட்சம் நிதி மதிப்பீட்டில், பசுந்தாள் உரவிதைகள், 50 சதவிகித மானியத்தில் விநியோகிக்கப்படும்.

பவர்டில்லர் மற்றும் பவர்வீடர் ஆகிய வேளாண் இயந்திரங்கள், 50 சதவீத மானியத்தில் விநியோகம்:

காவிரி டெல்டா மாவட்டங்களில், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 762 வேளாண் இயந்திரங்கள் (பவர்வீடர்-15 எண்கள், பவர்டில்லர் 747 எண்கள்), ரூ.6.44 கோடி மதிப்பீட்டில், வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத்திட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட மானியத்தில்,வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

PM kisan- இந்த 3 வழிமுறைகளில் e-KYC தகவல் அப்டேட் பண்ணுங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)