
a 20-year-old Ashok Gorre invented nine products to help farmers
இடுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க இயலாமல் விவசாயிகள் அவதியுறும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு கண்டு பலரின் பாராட்டினை பெற்று வருகிறார் சூர்யாபேட்டையைச் சேர்ந்த 20 வயதான இளைஞர்.
விவசாய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அசோக் கோர் என்கிற இளைஞர், ஆறாம் வகுப்பில் தனது கண்டுபிடிப்பு பயணத்தைத் தொடங்கினார். அடிப்படைக் கருவிகளில் தொடங்கி, விவசாயிகளுக்குப் பயன்படும் இயந்திரங்களை வடிவமைப்பதில் திறன் பெற்றார். களையெடுக்கும் கருவி, நெல் பயிரில் களை எடுக்கும் இயந்திரம், விதை விதைக்கும் கருவி மற்றும் மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் போன்ற அவரது விவசாய கண்டுபிடிப்புகள் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளன.
அவரது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் அவருக்கு ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளன. மேலும் சமீபத்தில், ஜூன் மாதம் நடைபெற்ற குளோபல் இந்தியன் சயின்டிஸ்ட் டெக்னோக்ராட்ஸ் (ஜிஐஎஸ்டி) நிகழ்வில் இளம் கிராமப்புற கண்டுபிடிப்பாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அசோக் இதுக்குறித்து பேசுகையில், “இன்றைய காலக்கட்டத்தில், வயல் வேலைக்கு தினசரி கூலி ஆட்களைக் கண்டுபிடிப்பது, குறிப்பாக சில ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, சவாலான பணியாகிவிட்டது. எனவே, விவசாயத்தில் தொழில்நுட்பத் தலையீடு உடனடித் தேவை. பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் விவசாய நோக்கங்களுக்காக ட்ரோன்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை வழங்கினாலும், அவை பல கிராமப்புற விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக எளிதில் அணுகக்கூடிய வகையில் இல்லை. எனவே, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் ஆற்றல் மற்றும் நேரத்தை குறைக்கும் வகையிலான கருவிகள் மற்றும் இயந்திரங்களை மலிவு விலையில் வழங்குவதே எனது குறிக்கோளாக கொண்டுள்ளேன்” என்றார்.
அசோக் தனது தயாரிப்புகளைப் பயன்படுத்திய விவசாயிகளிடமிருந்து கருத்துக்களை பெறுகிறார். மேற்கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கருவியினை மாற்றியமைத்தும் வருகிறார்.
அவரது கண்டுபிடிப்புகளில் ஒன்றான விதை விதைப்பு கருவி, உள்ளூர் சமூகத்தில் உள்ள சுமார் 200 விவசாயிகளுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
" தற்போது இவர் கண்டுப்பிடித்துள்ள அனைத்து கருவிகளும் இணையத்தில் உள்ள தகவல்கள், புத்தகங்கள் மற்றும் விவசாயிகளின் அனுபவத்தின் மூலம் கேட்டறிந்து சுய-கற்றல் மூலமாகவே உருவாக்கியுள்ளார். எதிர்காலத்தில், தானியங்கி இயந்திரங்களை உருவாக்குவதே எனது நோக்கம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
”எனது திறன்களை மேலும் மேம்படுத்தவும், எனது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை உருவாக்கவும் எங்கள் கிராமமான அஞ்சனிபுரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன். இந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த, ஆதரவும் முதலீடும் தேவை” என்று இளம் கண்டுபிடிப்பாளர் அசோக் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம், அசோக் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் அக்ரிகல்சுரல் பயாலஜிகல் இன்ஜினியர்ஸ் (ASABE) வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல உள்ளார். இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்கும் நிலையில் இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக அசோக் அதில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: the better india
மேலும் காண்க:
தந்தையின் மறைவால் விவசாயத்தில் இறங்கிய மகள்- கைக்கொடுத்த மிளகாய்!
Share your comments