கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் புதிய தடுப்பு மருந்துகளான கோவோவாக்ஸ், கார்பெவாக்ஸ் ஆகியவற்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், மோல்னுபிராவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் (Omicron virus)
இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு குடிமக்களை காக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென்னிந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றன. அதே சமயத்தில் 2 டோஸ் தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு பாதுகாப்பு கருதி ‛பூஸ்டர் டோஸ்' (Booster Dose) போடுவதற்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மானுஷ்க் மந்தவ்யா, புதிய தடுப்பூசிகள் குறித்து ஓர் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.
புதிய தடுப்பு மருந்துகள் (New Vaccines)
கார்பெவாக்ஸ் மற்றும் கோவோவாக்ஸ் ஆகிய இரண்டு புதிய வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவசர தேவைக்காக மட்டுமே இந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
கார்பெவாக்ஸ் தடுப்பு மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த பயலாஜிகல்-இ என்கிற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்பிடி புரத வகையைச் சேர்ந்த இந்த தடுப்பு மருந்து முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட், கோவாக்சினை அடுத்து இந்தியாவில் தயாராகும் மூன்றாவது தடுப்பு மருந்து இது என சுகாதாரத்துறை அமைச்சர் பெருமை தெரிவித்துள்ளார்.
இதுதவிர இந்தியாவைச் சேர்ந்த 13 மருத்துவ நிறுவனங்கள் மோல்னுபிராவிர் என்கிற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
2-வது டோஸ் தடுப்பூசிக்கும் பூஸ்டர் டோஸுக்கும் கால இடைவெளி எவ்வளவு?