அரபிக்கடலில் தற்போது ‘கியாா்’ மற்றும் 'மகா' புயல் நிலைகொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகுவது 1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த வரும் 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடலில் உருவாகி உள்ள மகா புயல் லட்சத்தீவு பகுதிகளில் தீவிர புயலாக நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாற இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இரு புயல்களால் கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் நேரங்களில் தோன்றும் இடர்பாடுகளை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி சேலம், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் புதுவையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 4-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, அது வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran