Credit : Dinamalar
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை, நெகமம், ஆழியார், கோட்டூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் (Coconut Trees) உள்ளன. இங்கு தேங்காய் மற்றும் கொப்பரை விற்பனை பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
குவிந்து கிடக்கும் தேங்காய்கள்
கொப்பரை தேங்காய்களை வாங்க திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், வெள்ளக்கோவில் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இ்ருந்தும், தேங்காய்களை வாங்க திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் (Merchants) வந்து செல்கிறார்கள். தற்போது தேர்தல் என்பதால் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தேங்காய் வியாபாரிகள் தற்போது வரவில்லை. இதன் காரணமாக இங்குள்ள தோப்புகளில் தேங்காய்கள் குவிந்து கிடக்கிறது.
நேரடி பணம்
தேங்காய் மற்றும் கொப்பரை வர்த்தகம் பெரும்பாலும் நேரடி பணப் பட்டுவாடா மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் சில வியாபாரிகள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு (Digital Money Transfer) மாறி உள்ளனர். ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் நேரடி பணம் மூலம் தான் வியாபாரம் செய்வதால், தற்போது அவர்கள் வரவில்லை. இதனால் தேங்காய் விற்பனை குறைந்துவிட்டதால் தோப்புகளில் தேங்காய்கள் குவிந்து கிடக்கிறது.
விவசாயிகள் கவலை
தேங்காய் விலையும் கடந்த 3 நாட்களில் டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வரை குறைந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு டன் பச்சை தேங்காய் ரூ.37 ஆயிரத்துக்கும், கருப்பு ரக தேங்காய் ரூ.40 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என்று தெரிகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். தற்போது காங்கயம் வெளி மார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை கிலோ ரூ.126 முதல் ரூ.130 ஆக உள்ளது என்று தென்னை விவசாயிகள் கூறினார்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மானாவாரியில் கோடை பருவ சாகுபடியில், அதிக மகசூல் பெற சில நுணுக்கங்கள்!
ஊடுபயிராக விளைந்த உளுந்து, பாசிப்பயிறு அறுவடைப் பணி தீவிரம்!