News

Tuesday, 31 August 2021 08:14 PM , by: R. Balakrishnan

Corona control extension

கொரோனா நோய் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள், செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, முதல்வர் ஸ்டாலின் (CM Stalin) தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில், கடற்கரைகளில் பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக, தலைமை செயலகத்தில் நேற்று காலை ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னேற்பாடுகள்

கூட்டத்தில், தடுப்பூசி போடுதல், சில மாவட்டங்களில் நோய் தொற்று பரவலின் தாக்கம் மற்றும் அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு, தொற்று அதிகரித்தால் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது.

முதல்வரின் அறிவிப்புகள்:

  • நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள், செப்டம்பர் 15 காலை 6:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
  • செப்டம்பர் 5 முதல், அனைத்து கடற்கரைகளிலும்
    ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்படுகிறது
  • ஏற்கனவே அறிவித்தபடி, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் தொடரும்.
  • கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய் பரவல் அடிப்படையில், தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பொதுவானவை

  • அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி (Vaccine) செலுத்தி இருப்பதை, தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், தொழில் வர்த்தக நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள், வங்கி மற்றும் அரசு பணியாளர்களுக்கு, சமூகப் பொருளாதார நடைமுறைகள் தடையின்றி நடக்க, முன்னுரிமை அடிப்படையில், மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவ துறையினர், தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அனைத்து கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில், ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி போடுங்கள்

பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்: மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனுக்காக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து, அனைவரும் முக கவசம் (Mask) அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், இதர பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவிட வேண்டும்.

விநாயகர் சிலைகள் வைக்க தடை

'விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், விழா கொண்டாடவும் அனுமதி இல்லை' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அறிவிப்பு விபரம்:

தற்போதுள்ள கொரோனா பரவல் சூழல் காரணமாக, சமய விழாக்களை முன்னிட்டு, மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, பொது இடங்களில் சிலைகளை நிறுவவும் அல்லது விழா கொண்டாடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதி இல்லை

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, தனி நபர்கள் தங்கள் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று, அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி உண்டு

Also Read | குழந்தைகளைத் தாக்கும் புளூ வைரஸ்: விழிப்புடன் இருங்கள்!

சென்னையை பொறுத்தவரை, கடற்கரையில் குறிப்பாக, சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில், இச்செயல்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது, முழுதுமாக தடை செய்யப்படுகிறது

தனி நபர்கள், தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை, கோவில்களின் வெளிப்புறத்திலோ; சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்ற, ஹிந்து சமய அறநிலைய துறையால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

விழாவிற்கான பொருட்கள் வாங்க, கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொது மக்கள், முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்

சென்னை வேளாங்கண்ணி மற்றும் இதர இடங்களில் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்பட உள்ள, மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின் போது, பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுகிறது

இவ்வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும், அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்.

மேலும் படிக்க

ஒரு டோஸ் தடுப்பூசி போதும்: ஆய்வில் ICMR தகவல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)