இந்திய அரசின், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மாநில அரசம் இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், நிலையான வருமானம் கிடைக்கவும் இது உதவும். இதன் மூலம் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தைத்தின் காரணமாக வேளாண் பயிர்கள் நடவு, களை எடுத்தல், அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனது. இதனால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கூலி பணியாட்கள் கிடைக்கும் பொருட்டு, விவசாயப் பணிகள் நடைபெறும் சமயங்களில் தற்காலிகமாக 100 நாள் வேலைத் திட்டத்தைத் நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது அந்தப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியாட்களை அசோலா பயிரிடுதல், வயல் வரப்பு மேம்படுத்துதல், தரிசு நிலத்தை மேம்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடுதல், கல் வரப்புகள் அமைத்தல், உரக்குழி அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பட்டுப்புழு வளர்த்தல், ஆடு மற்றும் மாட்டுக் கொட்டகை அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், தனிநபர் நாற்றங்கால் அமைத்தல் உள்ளிட்ட 15 வகையான வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநரகம் சார்பில் தெரிவித்திருந்தது.
தமிழகம் முழுவதும் பருவ மழை பெய்து வருவதால் நடவு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பட்டுப் புழு மற்றும் கால்நடைத் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதால், உணவு தானியங்களான நெல், சோளம், பயறு வகைகள் உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்களை வேளாண் சார்ந்த அனைத்துப் பணிகளிலும் பயன்படுத்துவதற்கு அரசு திட்டத்தில் திருத்தும் செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் இரா.சச்சிதானந்தம் கேட்டுக் கொண்டார். இவ்வாறு செய்வதன் மூலம், சிறு, குறு விவசாயிகள் அனைவரும் அதிக அளவில் பயன்பெற முடியும் என்றார்.
Anitha Jegadeesan
Krishi Jagran