Free electricity to 50,000 farmers: CM Stalin to launch on 11th - announced by Senthil balaji
புதிதாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை வரும் 11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இலவச மின் இணைப்பு வேண்டி, இதுவரை 4.5 லட்சம் விவசாயிகள் முன்பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
அவர்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில், 2022-23-ம் ஆண்டில் மேலும் 50,000 விவசாயிகளை இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் வருகிற 11-ம் தேதி துவங்க இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
2022-23-ம் ஆண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கபடும் என்ற ஒரு மகத்தான அறிவிப்பு முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டத்தை வருகின்ற 11 நவம்பர் 2022 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தடாகோவில் பகுதியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு படிப்படியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில்:
தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் மூலம் 114.3 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில், இந்த வாய்ப்பை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதா, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பல செய்திகள் வட்டாரம் தெரிவித்தன.
உறுதி செய்த அமைச்சர்:
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் கதி சக்தி மசோதா என்ற மின்சார திருத்த மசோதாவால், இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும். இந்த மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதால், அந்த மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் பெறும் நுகர்வோர்களுக்கு மின்சார திருத்த சட்ட மசோதாவால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் இருந்த போதிலும் தற்போது, விவசாயிகள் பயனடையும் வகையில், இந்த புதிய அறிவிப்பு விவசாயிகளை மகிழச்சியடைய செய்துள்ளது.
மேலும் படிக்க:
"விராசாட்-2" திட்டம்: 6% வட்டியில் கைவினைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி!
வேளாண் இயந்திரங்கள், கருவிகளை 50% மானியத்தில் பெற இன்றே விண்ணப்பிக்கவும்