தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்காக நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) நடைபெறுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2022 ஆகஸ்ட் மாதத்துக்கான குறை தீர்ப்பு முகாம் எப்போது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டு (Ration Card)
மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை இந்த முகாம் மூலமாகப் பெறலாம்.
குறைதீர்ப்பு முகாம் (Grievance camp)
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு முதியவர்கள் மணிக் கணக்கில் காத்துக் கிடந்து ரேஷன் பொருட்கள் வாங்குவது சிரமமாக இருக்கும். அதற்காக இந்த அங்கீகாரச் சான்று தமிழக அரசு சார்பாக வழங்கப்படுகிறது.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் எப்போது? முக்கிய தகவல்!