GST for rice: Rice mills strike across Tamil Nadu!
அரிசி மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சுமார் 4,000 அரிசி ஆலைகள், 20,000 சில்லறை விற்பனை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் அரிசி ஆலை சம்மேளனம், அனைத்து தானிய வர்த்தக அமைப்புகள், இன்று (16ம் தேதி) வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தன.
அரிசிக்கு ஜிஎஸ்டி (GST for Rice)
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
அரிசி மீது 5% ஜிஎஸ்டி காரணமாக, சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். இதன் காரணமாக தற்போது இருப்பதை விட, 3 முதல் 5 ரூபாய் வரை அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே படிப்படியாக அஞ்சல் துறை சேவைகள் மற்றும் உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில், அரிசிக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
உயர்ந்து வரும் அரிசி விலை: ஜிஎஸ்டி வரியால் மேலும் உயர வாய்ப்பு!
உணவுப் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி: திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது!