கொங்கு மண்டலத்தில் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், 85 - 88 சதவீதம் பேருக்கு உருவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக தடுப்பூசி செலுத்தியது தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலை கண்டறிய நான்கு கட்ட முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா எதிர்பாற்றல் (Corona Resistance)
முதல் கட்ட ஆய்வில், 32 சதவீதம் பேருக்கும், இரண்டாம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மூன்றாம் கட்ட ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்பாற்றல் கண்டறியப்பட்டது. நான்காம் கட்ட ஆய்வில் கோவை, சேலத்தில், 85 சதவீதம்; திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 86 சதவீதம்; நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது.
எதிர்பாற்றல் அதிகரிப்பதற்கு தடுப்பூசி விழிப்புணர்வே முக்கிய காரணம். தடுப்பூசி செலுத்திக் கொள்வது முக்கியம் என்பது இந்த நான்கு கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகவே, தடுப்பூசியை யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
பி.ஏ.2 வைரஸ் (B.A.2 Virus)
உலகம் முழுதும், மூன்றாம் அலைக்கு வழிவகுத்த, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி, நாம் நகர்ந்து வருகிறோம். இந்நிலையில், ஒமைக்ரானினிலிருந்து உருமாறிய பி.ஏ.2 வகை வைரசால், மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க