வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது மற்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை தொடர்ந்து நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை நீடித்தால் விவசாயம் மற்றும் குடி தண்ணீர் பஞ்சம் தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர் .
குமரி கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக நீடித்து வரும் காற்று சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், குறிப்பாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran