News

Wednesday, 01 November 2023 02:09 PM , by: Muthukrishnan Murugan

Minister MRK Panneerselvam

சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (31.10.2023) நடைபெற்றது.

இக்கூட்டமானது டெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்கான ஆலோசனைகள் வகுக்கும் வகையில் நடைப்பெற்றது. துறை ரீதியான அதிகாரிகள் தங்களது கருத்துகளை வழங்கிய நிலையில், கூட்டத்தின் முடிவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள உள்ள விவசாயிகளுக்கான ஆலோசனைகளை வெளியிட்டது.

அதன்படி நவம்பர் 15- ஆம் தேதிக்கு முன்பு மழை பொழிவு பெறப்படின், குறுகிய கால நெற்பயிர் இரகங்களான ஆடுதுறை 45, 53,56, 57, கோ 51. அம்பை 16 என்ற இரகங்களை நேரடி விதைப்பு முறையில் பயிரிடலாம். பருவமழை பொய்த்தால் குறுகியகாலப் பயிர்களான பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களை, மார்கழிப் பின் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.

தற்போது, நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களில் வறட்சி ஏற்படும் பட்சத்தில் வறட்சியைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்தும், பிங்க் பிக்மெண்ட்டட் ஃபேக்கல்டேடின் மெத்தையோ ட்ரோஃப் என்ற உயிரினக் காரணியை ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி என்ற வீதத்தில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிலத்தடி நீரை (கிணறுகள், உறைக் கிணறுகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகள்) தேவைக்கேற்றவாறு, சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் 15.11.2023 க்குள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா. இ.ஆ.ப, வேளாண்மைத் துறை ஆணையர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப, வேளாண்மை கூடுதல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங். இ.ஆ.ப,  தலைமைப் பொறியாளர் (வே.பொ.) ஆர்.முருகேசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தென் மேற்கு பருவமழை காலத்தில் போதிய மழைநீர் இல்லாத காரணத்தினாலும், கர்நாடகவிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பெரும் அவதியுற்றனர். பல இடங்களில் பயிர்கள் கருகும் நிலையும் ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுக்காத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம் ஒன்றினையும் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறுவை சாகுபடியின் வீழ்ச்சியில் இருந்த மீளாத விவசாயிகள் சம்பா சாகுபடியினை திறம்பட மேற்கொள்ள வடகிழக்கு பருவமழையினை தான் நம்பியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தற்போது வரை இயல்பை விட குறைவான மழைப்பொழிவை பெய்துள்ளதால் சம்பா சாகுபடியும் வீழ்ச்சியடையுமா என்கிற ஐயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் காண்க:

2000 ரூபாயை நெருங்கியது ஒரு சிலிண்டர் விலை- வியாபாரிகள் அதிர்ச்சி

யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 காசு- மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)