News

Saturday, 17 October 2020 07:13 PM , by: KJ Staff

Credit : Vikatan

அரிசி, பருப்பு என அனைத்தையும் உற்பத்தி செய்யும் நமக்கு, அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் (Protection Methods) தெரியாததால் பூச்சிகளுக்கு இரையாகக் கொடுத்துவிட்டுத் தவிக்கிறோம். அதைச் சரிப்படுத்தும் நோக்கத்தில் இயற்கை முறையில் விதைகளையும், உணவுப் பொருள்களையும் தரமாகப் பாதுகாக்க ஒரு முறையைக் கண்டுபிடித்திருக்கிறது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University)

வசம்பு எண்ணெய்த் தயாரிப்பு:

பாரதியாரின் தம்பி வழிப் பேரனான குஞ்சரமணி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் (Agricultural Engineering) படித்து விட்டு, 2002-ம் ஆண்டு முதல் விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து வருகிறார். தற்போது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் வசம்பு எண்ணெய் (Mint oil) மூலம் விதைகளைப் பாதுகாக்கும் மருந்தைத் தயாரித்து வருகிறார். அதைப் பயன்படுத்துவதால் ஒரு வருடத்துக்கு விதைகளைப் பூச்சி தாக்காது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த இயற்கை மருந்துக்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (Indian Agricultural Research Institute) ஒப்புதல் அளித்திருக்கிறது.

பூச்சித் தாக்குதல்:

வசம்பு எண்ணெய்த் தொடர்பாகப் பேசிய குஞ்சரமணி, ``தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் (Storage warehouse) சேமிக்கப்படும் பொருள்களைப் பூச்சிகள் நாசப்படுத்துகின்றன. அரிசி, பருப்பு போன்றவற்றைப் பாதுகாக்கும்போது அதில் வண்டுகள் தாக்கிக் கழிவுகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, விவசாயிகள் விதைக்காகவும் நல்ல விலை கிடைப்பதற்காகவும் நெல், பருப்பு உள்ளிட்டவற்றைப் பாதுகாத்து வைக்கிறார்கள். என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும் சில நாள்களிலேயே அதில் பூச்சிகள் (Insects) வந்துவிடும். காரணம், உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை நாம் சேமிக்கக் கொண்டுவரும்போதே அதன்மீது பூச்சிகளின் முட்டைகள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்.

Credit: Vikatan

கவசா மருந்து:

நாம் சேமித்து வைத்த 21 நாள்களில் பூச்சிகள், சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிடும். நமது விவசாயிகள் சேமிக்கும் பொருள்களில் 20 சதவிகிதம் வரை பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவற்றால் சேதம் ஏற்படுகிறது. அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் (Control mechanisms) குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையின் விஞ்ஞானி ஜெயராஜ் நெல்சன் தலைமையில், எங்கள் ஆய்வகக் குழுவினர் இணைந்து `கவசா’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறோம். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், இந்த மருந்தை நாடு முழுவதும் உள்ள பல்வேறு உணவு சேமிப்புக் கிடங்குகள் மற்றும் விவசாயக் கூடங்களில் ஆய்வு செய்து அதன் பிறகு, ஒப்புதல் கொடுத்திருக்கிறது.

பயன்படுத்தும் முறை:

வசம்பு எண்ணெய்
நெல், பருப்பு வகைகள் போன்றவற்றின் விதைகளைப் பாதுகாக்க விரும்பும் விவசாயிகள் இந்த மருந்தைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஒரு கிலோ விதையில் 10 மில்லி கவசா மருந்தை நேர்த்தி செய்துவிட்டால், ஓராண்டுக்குப் பூச்சித் தொல்லைகளிலிருந்து விதைகளைப் பாதுகாக்க முடியும். இது இயற்கை தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதால், ஒருவேளை விதைகளை மீண்டும் உணவுப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும் என்றாலும், கழுவிவிட்டுச் சமைக்க முடியும்.

கவசா மருந்தின் விலை:

மருந்தை ஒரு லிட்டருக்கு ரூ.300 (ஜி.எஸ்.டி தனி) என்ற விலையில் விற்பனை செய்கிறோம். இதைப் பயன்படுத்துவதால் விவசாயிகளின் விளைபொருள்கள் பூச்சிகளால் வீணாவது தடுக்கப்பட்டு லாபம் பெற முடியும். ஒரு கிலோ விதைக்கு 10 மில்லி கவசா மருந்து தேவை. இம்மருந்து, பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படுவதுடன் இனப்பெருக்கத்தையும் தடுத்துவிடும். விதை நேர்த்தி (Seed treatment) செய்த மூன்று நாள்களில் அனைத்து கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் அழித்துவிடும். விதைச் சேதம் தடுக்கப்படுவதால் 12 முதல் 15 சதவிகிதம் கூடுதல் உற்பத்தி (Production) கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் நஞ்சில்லா தானிய உற்பத்திக்கு (Non-toxic Grain Production) வழிவகுக்கும்.

Credit : Vikatan

இயற்கையை பாதுகாக்கலாம்:

விதைகளின் தரம் கெட்டுப் போகாமல் நீண்ட காலத்துக்குச் சேமித்து வைக்க வழிவகை ஏற்படும். நஞ்சில்லாத காரணத்தால் தவிர்க்க முடியாத காரணங்களின்போது விதைகளை (Seed) மீண்டும் தானியமாகப் பயன்படுத்தலாம். இதர கொடிய இரசாயன மருந்துகளுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தி இயற்கையைப் (Nature) பாதுகாக்க முடியும் என்றார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மக்காச்சோளத்தில், படைப்புழுவைக் கட்டுப்படுத்த, ஹெக்டேருக்கு 2000 ரூபாய் மானியம்!

மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் மோசடி! விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கியதை கண்டுபிடித்த அதிகாரிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)