One mobile number for 2-dose vaccination
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வந்த நிலையில், அதற்குத் தீர்வாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள, ஒருவர் குறைந்தது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும் போது, ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி (Corona Vaccine)
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுடைய விவரங்கள், கோவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் 2 வது டோஸ் மட்டும் செலுத்திக் கொள்ளாதவர்களை மிக எளிதில் அடையாளம் காண முடியும். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு, முதல் டோஸ் செலுத்திக் கொண்டதற்கு மட்டும் இரண்டு தனித்தனி சான்றிதழ்கள் வந்துள்ளன. கோவின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு விளக்கமளித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மொபைல் எண் (Mobile Number)
இந்த அறிக்கையில், ‘கோவின்’ இணையதளம் மூலம் பதிவு செய்து கொண்ட 100 கோடிக்கும் மேலானவர்களுக்கு, 190 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2 வது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யும்போது, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் போது கொடுத்த அதே மொபைல் எண்ணையே, அளிக்க வேண்டும் என்றும், அப்போது தான் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் ஒருவரே என ‘கோவின்’ இணையதளம் அங்கீகரித்துக் கொள்ளும். அதன் பிறகு, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் ஆகியவற்றுக்கு வெவ்வேறு மொபைல் எண்களை கொடுத்தால், ‘கோவின்’ இணையதளம் அதனை, இரண்டு வெவ்வேறு தனிநபர்களாக கருதி, 2 டோஸ்களும் 2 வெவ்வேறு முதல் டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ்களையே அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 தனித்தனி மொபைல் எண்களுக்கு, ஒரே அடையாள ஆவணம் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆகவே, மனிதர்களால் ஏற்படும் இந்த தவறை, தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறுவது அபத்தமானது என்றும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
மேலும் படிக்க
ஊரடங்கில் தொடர் குடி: இந்தியர்களுக்கு இந்த நோய் அதிகரிப்பு!
கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!