News

Monday, 06 May 2024 12:40 PM , by: Muthukrishnan Murugan

TN ePass

ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு, நாளை முதல் (7.5.2024) வருகிற 30.6.2024 வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி epass விண்ணப்பிப்பதற்கான செயல்முறை இன்று (6.5.2024) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவது வழக்கம்.

வாகனங்களுக்கு இ-பாஸ்: உயர்நீதிமன்ற உத்தரவு

கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம்- ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் பெற விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும்இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.

இ-பாஸ் பெற இணையதள முகவரி வெளியீடு:

மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து 6.5.2024 காலை 6.00 மணி முதல் இ- பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய இ-மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும். மேலும், இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழி வகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் 7.5.2024 முதல் 30.6.2024 வரை பின்பற்றுவார்கள் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும், இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

12th Result 2024: வெளியானது ப்ளஸ் 2 ரிசல்ட்- பாட வாரியாக தேர்ச்சி எவ்வளவு?

Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)