அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது.
கொரோனாவால் முடங்கிய பள்ளிகள்
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் முறையாக செயல்படவில்லை, இருப்பினும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. இடையில் கொரோனா பாதிப்பு குறைந்தபோது 9,10,11,12ஆம் வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டுச் செயல்பட்டன. ஆனால், பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்துப் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
எனவே கொரோனா தொற்றின் பாதிப்பு குறையாத காரணத்தல் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதித்தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டன. தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
பிளஸ் 2 தேர்வு ரத்து
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வின் மதிப்பெண்கள் உயர்கல்லவிக்கு மிகவும் அவசியம் என்தபால் அந்த தேர்வை ரத்து செய்வதற்கு மட்டும் காலத்தாமதம் ஆனது. எனினும் கொரோனா தொற்று காரணமாக தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 சேர்க்கை
10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கைக்கு செல்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடாக 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 சேர்க்கை நடத்தலாம் என அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இதன்படி பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. முதலில் அந்தந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன் பின்னரே மற்ற பள்ளிகளில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சேர விரும்பும் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தால் கூடுதலாக 15% வரை இடங்களை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாணவர்கள் குவிவதைத் தடுக்க ஒருவார இடைவெளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஒரு நாளைக்கு 30 மாணவர்கள் என்கிற அடிப்படையில் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.
மேலும் படிக்க...
கொரோனாத் தொற்றுக் குறைய உதவிய மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் ஸ்டாலின்!
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!