News

Friday, 25 November 2022 07:39 AM , by: Elavarse Sivakumar

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைகளில், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அரிசி கார்டுக்கு மாற வாய்ப்பு அளிக்கும்படி, சர்க்கரை கார்டுதாரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு முடிவு?

பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்குவதற்காக, அரிசி கார்டுக்கு மாற வாய்ப்பு அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சர்க்கரை கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு

ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

குளறுபடி

அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவியதால், 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தத் தொகுப்புடன் ஒரு சில மளிகைப் பொருட்களும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

கோரிக்கை

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக, அரிசி கார்டுக்கு மாற வாய்ப்பு அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சர்க்கரை கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வசதியாக இருந்த போது, சர்க்கரை கார்டுகள் வாங்கியவர்களில் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றது, பிள்ளைகள் கவனிக்காதது உள்ளிட்ட காரணங்களால் ஏழ்மை நிலையில் தற்போது உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற காரணங்களால், அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3.83 லட்சம்

சர்க்கரை கார்டுதாரர்கள் கோரிக்கைகள் குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 3.83 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)