அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பரவலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு வங்கக் கடலில் 45 முதல் 50 கிலோ.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் வட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை தொடர்ந்து நீடிக்கிறது. திற்பரப்பு சுற்று வட்டாரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக பட்ச மழை பொழிவாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 15 செ.மீ மழையும், நடுவட்டத்தில் 11 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 5 செ.மீ மழையும், நெல்லை மாவட்டம் பாபநாசம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
விடாது பெய்து வரும் கனமழை
தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மீண்டும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் தண்ணீர் காடாக காட்சியளிக்கிறது. நேற்று ஒரே நாளில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சயன், கிங் சர்க்கஸ் ரயில் நிலையம், காந்தி மார்க்கெட், பாலகர் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து, ரயில் சேவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran