Summer Holiday Announcement
கோடை காலம் துவங்கி, வெயில் வாட்டி வரும் நிலையில், ஆங்காங்கே அனல் காற்றும் வீச ஆரம்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்நிலையில், வருகின்ற மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி, மே 28 வரை நீடிக்கும் தகவல் கிடைத்துள்ளது. முடிந்த அளவுக்கு வெயிலில் செல்லாமல் இருப்பதே நலம்.
கோடை வெயில் (Summer Heat)
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக, வருகின்ற மே 14 ஆம் தேதி முதல், அனைத்து பள்ளிகளுக்கும் கோடை கால விடுமுறை அளிக்கப்படும் என, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இந்த வருடம் நாடு முழுவதும், பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகத் தான் காணப்படுகிறது. பகல் நேரங்களில், மக்கள் அனைவரும் வெளியே செல்ல பயப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள், மர நிழலைத் தேடிப்பிடித்து தஞ்சம் அடைகின்றனர். அதிலும் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இயல்பை காட்டிலும், வெயில் அதிகமாக உள்ளது. அதிக வெப்ப நிலையோடு, அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
அதிகபட்சமாக அமிர்தசரஸில் 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை அளிக்க பஞ்சாப் அரசு முன்வந்துள்ளது.
கோடை விடுமுறை (Summer Holidays)
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் இத்தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில், “பஞ்சாபில் நிலவும், கடுமையான வெப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான பெற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி, வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று முதல்வர் பகவந்த் மான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
கொரோனா புதிய அலைக்கு வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
மே 4 இல் துவங்குகிறது அக்னி நட்சத்திரம்: வெயிலில் கவனம் தேவை!